பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழர் பண்பாடு


ஐந்திணைகளில், ஒவ்வொரு திணைக்கும் உரியவாய சில பாக்களை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். அப்பன்னெடுங் காலத்தில் தமிழர் நடத்திய வாழ்க்கை நிலை பற்றிய படக்காட்சியை, மறுவலும் உருவாக்கிக் காணப்படிப்பார்க்கு அவை துணை புரியும். இந்த வாழ்க்கை முறை பெரும்பாலும் அக்காலத்திற்கு முன்பும், அக்காலத்திற்குப் பின்பும், இருந்த வாழ்க்கை முறையேதான் என்பதும் காணப்படும். புறத்தூண்டுதல் இன்றி, அகத்தூண்டுதலால் எழும் இயற்கைக் காதல் நிலை , பின்வரும் சிறுபாட்டில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ‘'என் தாயும் உன் தாயும் ஒருவருக் கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தை யும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? உள்ளத்தால் இப்போது ஒன்றுபட்டு நிற்கும் நானும், நீயும் ஒருவரை யொருவர், எவ்வாறு முன்பு அறிந்திருந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சங்கள், தாமாகவே ஒன்று கலந்து விட்டனம்


"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.'’
                 குறுந்தொகை : 40

காதலர், என்றும் போலவே, அன்றும் மன உறுதியுடையரல்லராயினர். அதனால் காதலனால் கைவிடப்பட்ட கன்னிப்பெண், அக்கைவிடப்பட்டமையை எண்ணி எண்ணிப், புலம்பத் தொடங்கிவிட்டாள், “நானோ, இவ்விடத்திலேயே இருக்கிறேன். என்னோடு பிரியாமல் ஒன்றியிருந்த என் பெண்மை நலனோ என்றால், தினைப்புனம் காத்து நிற்பார் விடும் கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, காட்டுயானை, தான் கைப்பற்றியிருந்த பசிய மூங்கிலைக் கைவிட்டதாக, அம்மூங்கில், மீனைக் கவர்ந்து கொண்ட தூண்டிற்கோல்