பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

143


பாசறை மீமிசைக் கணம்கொள்பு ஞாயிற்று
உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன்
நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய்
யார்க்கு நொந்துரைக்கோ யானே! பன்னாள்
காமர் நனிசொல் சொல்லி
ஏமம் என்று அருளாய், நீமயங் கினையே
                 - நற்றிணை : 396

இப்பாக்கள், மலைநாட்டுக்குரியதான, மணத்திற்கு முந்திய தான களவுக் காதல் பற்றியனவாம். குறிஞ்சித் திணைக்கு உரியவாம்

முல்லையில் காதலர் :

காடு சார்ந்த நிலத்து மக்கள் ஒழுக்கமாகிய முல்லைத் திணை, சிறு பிரிவின் துயர் ஆற்றமாட்டாது வருந்தி, இருத்த லைக் குறிப்பதாகும். போர் முடிந்து மீளும் காதலன், தேர்ப்பாகனிடம் பின்வருமாறு கூறுகிறான். நம் அரசனும் செய்தற்கரிய போரை முடித்துக் கொண்டான். மலைச் சுனைகளில், மகளிர் கண்போல் ஒளிவிடும் குவளைகள் மலர்ந்துவிட்டன. பரந்து அகன்ற காடெங்கும் வேங்கை, தன் மலர்களை உதிர்க்கலாயின. இம்மெனும் ஒலி எழ, வண்டுகள் எத்திசையும் பறக்கலாயின. பேரூர்களின் அகன்று நீண்ட தெருவு போலும் பெருவழிகளில் நெடிது நடைபோட்ட நம் வீரர்கள் ஆங்காங்கே இருந்து இளைப்பாறலாயினர். வெண்காந்தள் மலரின் பெரிய இதழ்கள், குதிரைகளின் கவிழ்ந்த குளம்புகளால் மிதியுண்டு, வெண்சங்கு உடைந்து சிதறினாற்போல் சிதறுண்டு போயின. இவை கண்டு தோள்வலிக்க விரைந்து மீளும் நம் வருகையை, அழகிய புள்ளிகள் பொருந்திய அல்குலையும், இனிய மொழியையும் உடையளாய்த் தன் மகனை அழாமல் ஆற்றுவான் வேண்டிப் பொய்க்கதைகளைக் கூறிக் கொண்டிருக்கும் நம் காதலிக்கு, நிமித்தம் காட்டும் காக்கைகள் கரைந்து அறிவித்திருக்குமோ?

இறையும் அருந்தொழில் முடித்தெனப், பொறைய
கண்போல் நீலம், சுனைதொறும் மலர,