பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஆறு செல்வங்கள்

அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்." என்பவை அதிவீரராம பாண்டியரது கருத்துக்கள்.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே. வேற்றுமை தெரிந்த நாற் பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே" என்பது புறநானூற்றுப் புதுமை.

நம் நாட்டில் 1911ஆம் ஆண்டு எடுத்த மக்கள் எண்ணிக்கைக் கணக்கின்படி படித்த ஆண்மக்களின் எண்ணிக்கை 100க்கு 9; படித்த பெண் மக்களின் எண்ணிக்கை 100க்கு முக்கால். 1921ஆம் ஆண்டு கணக்கின் படி 100க்கு இது 11ம் ஒன்றே காலுமாக உயர்ந்தது. பின் இது 1931இல் 15ம், 3மாக உயர்ந்து காணப்பட்டது. 1941இல் படித்த ஆண் 20, படித்த பெண் 8. 1951இல் இது 26ம் 8ம் ஆக இருந்தது. 1961இல் படித்த ஆண் 100க்கு 34 வீதமாகவும் படித்த பெண் 100க்கு 13 வீதமாகவும் இருக்கிறது. எனினும் மக்கள் கல்விச் செல்வத்தைப் போதிய அளவு பெற்றதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் பிற நாடுகளில் கற்றறிந்த மக்களின் எண்ணிக்கை இப்போது 100க்கு 72ம் 61 ம், 85ம் 72ம், 91 ம் 86ம் ஆகவும் இருந்து வருவதாகவும், சப்பானில் படித்தவர்களின் எண்ணிக்கை 100க்கு 100ஆக இருந்து வருவதாகவும் தெரியவருகிறது.

ஆகவே படி, நன்றாகப் படி; வாழ்வதற்காகவே படி, படிப்பதற்காகவே வாழ். எல்லாவற்றையும் படிக்காதே. படிக்க வேண்டியவைகளை மட்டும் படி, படித்து அறிந்தவைகளைச் சிந்தித்து உணர். நல்லதைக் கொள். பின் அப்படியே நட. ஏனெனில் கல்வியின் குறிக்கோள் அறிவை அடைவது மட்டுமல்ல: அன்பையும் அருளையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதும் ஆகும்.

வாழட்டும் தமிழகம்!