பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


பினை இப்பொறுப்பினை இப்பொழுது ஏற்றுக்கொண்டவன் சங்கிலி.

இருட்டு அரசோச்ச, காதலர்களின் கண்கள் 'மௌன நாடகம்' ஆடத் தொடங்கின!-திரையிலே!

ஆட்டம் முடிந்தது. கும்பல் கலையத் தொடங்கியது.

சகடயோகம் தன் தர்மபத்தினியின் மென்கரம் பற்றி வெளியே வந்து கொண்டிருந்தார். பழைய வேலைக்காரன் 'சலாம்' வைத்தான். 'கேட்'டை நெருங்கிக் கொண்டிருக்கையில், பையன் சங்கிலி குறுக்கே மறித்து நின்றான். 'ஐயா, இந்தாங்க ஒங்க பத்துப் பைசா! இது எனக்கு வேணாம்...! எம்பிட்டு பத்து ரூபாய்க்கு ஈடு கட்ட, இந்தப் பத்துப் பைசாவாலே முடியுமா? ஆனா எம்மாதிரி ஏழை பாழைங்களுக்கும் கஷ்ட நஷ்டத்துக்கும் ரொம்பச் சொந்தமுண்டுங்க!....ஆனா, ஒங்களுக்கு இன்னிக்கு-அதான்ஸார்-இப்ப படம்பார்த்தப்ப... உண்டாச்சே ஒருநஷ்டம்... அதை உங்களாலே தாங்க முடியாதா ஸார்?...நீங்க படே ஆளு ஸார்! உங்களுக்குத்தான் இதெல்லாம் சர்வ சகஜமாச்சே! நான் சொல்றது பொய்யா ஸார்?" என்று 'டயலாக்' பேசிவிட்டு, கையில் தயாராக வைத்திருந்த பத்துக்காசுப் பணத்தை அலட்சியத்துடன், நீட்டினான் அவன்.

செயலற்று நின்றுவிட்ட சகடயோகத்தின் முகத்தில் 'தெரிந்த முகங்கள்' தெரிந்தன. வியர்வை வழிய, கால்கள் நடுங்க கோபம் கனல் தெறிக்க அந்த அலட்சியச் சிரிப்பை எதிர்க்க முடியாத தோல்வியுடன் முகத்தைத் தாழ்த்தி, நடுக்கிய கையை நடுக்கத்துடன் உயர்த்தி நீட்டி, அதில் விழுந்த அந்தப் பத்துக்காக நாணயத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டே, ஓர் அரைக்கணம் செயலிழந்து, செய்வகை அறியாது நின்றார் சகடயோகம்.