பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தி குன்றக்குடி அடிகளார்

என்று ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார், சேக்கிழார் பெருமான். அதிலும், முதல் தடவை பரவையார் உடன்படாமற் போகத் தோல்வியைச் சுமந்து கொண்டு ஆரூரரின் முன்வந்து நின்ற இறைவனைப் பார்க்க இரக்கமாக இருக்கிறது. சுந்தரரோ பெருமான் மனம் வைத்தால் இயலாத தில்லையென நம்புகிறார். அது மட்டுமா? இறைவன்பாற் கொண்டிருந்த கிழமை மிகுதியால் உயிர் தரியேன் என்று மிரட்டுகிறார். மீண்டும் இறைவன் பரவையார் இல்லம் நோக்கி நடக்கிறார். இத்தகு நிகழ்வுகள் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன? காதல் மணம் புரிந்தவர்கள் பிரிதல் கூடாது என்ற உயரிய தத்துவம் திருக்கோயில் தந்த திருமண வாழ்க்கைத் தத்துவம் என்பதே! இந்தத் தத்துவம் மனையற வாழ்க்கைக்கு அரணாகவும் காதலின்பத்திற்கு ஊற்றாகவும் விளங்குவது அறிக.

தோழமை வாழ்க்கை

காதல் வாழ்க்கைக்கு அடுத்தது தோழமை வாழ்க்கை. இல்லை! காதல் வாழ்க்கையினும் மிக உயர்ந்தது தோழமை வாழ்க்கை "நட்பிற் சிறந்தது ஒன்றில்லை" என்று வள்ளுவம் கூறும். திருக்கோயில் இயக்கச் சூழ்நிலையில் நட்புக்கு வாயில்கள் அமைந்துள; நட்பும் வளர்ந்தது. திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் நற்றமிழாரூரருக்குத் தன்னைத் தோழமையாகத் தந்தமையை நாடறியும். தோழமை எதற்காக மண் - மீது விளையாடத் தோழமை துணை செய்ய வேண்டும். சுந்தரர்க்கு இறைவன் தோழனாக நின்று பொன் தந்தான்்; பூவையர் தந்தான்். வழக்கமாக எழுந்தருளும் திருக்கோயில் திருவுருவத்தினை நீங்கி, மகிழின் கீழ் இருந்தான்்! தூது சென்றான்; ஆளாக