பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

மார்க்சியம் தெளிவான புதிய பார்வையை உலகுக்குத் தருகிறது. பாரத நாடு தனி மனித ஒழுக்கத்தை வற்புறுத்துகிறது; அதைச் சுற்றியே அவன் சிந்தனை வளர்ந்தது. இராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அவனுக்குப் பெருமை கற்பிக்கப்பட்டது. பெண் பிறர் நெஞ்சு புகக் கூடாத கற்பு தேவைப்பட்டது. ‘அறம் பொருள் இன்பம் வீடு’ இந்த நான்கு அடிப்படைகளை வைத்து வாழ்க்கை லட்சியம் பின்னப்பட்டது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் எனப் பேசப்பட்டது . பொருள் ஈட்டுதல் அதனைத் தனக்கும் அறச் செயல்களுக்கும் பயன் படுத்துவது பொருள் எனப் பேசப்பட்டது . ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் பொருளாதாரத்தின் அடிப்படைகள் ஆயின; ஒருவன் ஒருத்தி என்ற அடிப்படையில் இல்லறம் காத்து இன்பம் எய்தல் வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதற்குப் பிறகு ‘வீடு’ என்ற கோட்பாடும் புகுத்தப்பட்டது, அதனை ஒட்டி இம்மை மறுமை என்ற இருவேறு நிலைகள் பேதப்படுத்திக்காட்டப்பட்டன, உலக வசதிகளைத் துய்த்தல் சிற்றின்பம் என்றும், அவற்றை விட்டு மறு வாழ்வுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வது பேரின்ப வாழ்வுக்கு வழி என்றும் கூறப்பட்டன. பேரின்பத்தை அடைய வழிகள் கூறப்பட்டனவே தவிரப் பேரின்பம் அடைந்தவர்களின் வரலாறுகள் கூறப்படவில்லை. இறக்கும்போது இறப்பை இனிய நிலையில் வரவேற்கும் மனோநிலையை ஜீவன் முக்தி என்று பேசினார்கள். சாகும் போதும் துன்பம் இல்லாமல் சாகவேண்டும் என்று விரும்பினான். இதை ஒட்டிப் பல சமய சாத்திரங்கள் விவாதங்கள் பெருகின. இவற்றை மாற்றி இன்று தனி மனிதனும் சமுதாயமும் எவ்வாறு பிணைப்புறுகிறது என்று எண்ணும் சூழ்நிலைக்கு நாம் வந்துள்ளோம். நாட்டின் வளர்ச்சியில் அதன் அரசியல் சமுதாய மாற்றத்தில் தனி மனிதனின் நல்வாழ்வு பிணைப்புண்டு கிடக்கிறது என்பதை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.