பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 16 —

இந்தியப் படையினர் இலங்கை செல்லாதிருந்த முன்னர், சிங்களப் படையினர் அங்கிருந்த தமிழர்களின் மேல் ஒரு நாளைக்கு 40, 50 முறைகள்தாம் குண்டு வீச்சு நடத்தி வந்தனர். ஆனால் அங்கு இராசீவால் அனுப்பி வைக்கப் பெற்ற இந்தியப் படையினர் ஒரு நாளைக்கு 500 முறைகளுக்கு மேல் குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளனர். இவற்றிலிருந்து இராசீவ் ஈழத் தமிழினத்தை அழிக்க எந்த அளவு தீவிரம் காட்டியிருக்கிறார் என்பதை இக்கால் சிந்தித்துப் பார்த்தால், அவரின் கொடுமை புலப்படும். இவரால் இக்காலகட்டத்தில் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களும், இரண்டு இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழினப் பொது மக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். பன்னூற்றுக் கணக்கான பெண்கள் சீரழித்துச் சிதைக்கப் பட்டுள்ளனர்; 5000 பேர்களுக்கு மேல் கைகால்களை இழந்து போயிருக்கின்றனர். ஓரிலக்கத்திற்கும் மேலான தமிழ் மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன; மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறைப்படுத்தப்பட்டு உறுப்புச் சிதைவுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் — என்றால் இவை தமிழினத்தை அழித்த செய்தியாகாதா என்று இன்றைக்கு இராசீவைக் கொண்டாடும் அரசியல் சூதர்கள் எண்ணிப் பார்க்கட்டும்.

இராசீவ், அன்றைய நிலையில் தமிழீழத்தைப் பொறுத்த அளவில், இலங்கையின் வல்லதிகாரத் தலைவரைப் போலவே நடந்து கொண்டார். அவர், தம் அமைதிப் படையென்னும் அரக்கர் படை அல்லது சாத்தானின் படையின் வழி, அங்குள்ள தமிழினத்தைப் படிப்படியாக அழிக்கத் தொடங்கிய அந்தக் கொடுமையை நாம் தென்மொழி, தமிழ்நிலம் ஆகிய இதழ்களின் வழியாக மிக வன்மையாகவும் கடுமையாகவும் கண்டித்து வந்தாலும், அவற்றின் தாக்கங்களை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாமல், மனம் மிகவும் துயருற்றது.