— ௫ —
தனிநிலையினராய்க் கையற்ற நிலையில், திரண்ட மனக் கொதிப்புரைகளைச் சொல்லீட்டிகளாய்க் கொட்டி, எழுதி இட்ட சாவம்தான், மூன்றாண்டுகள் கழித்து முட்டியது.
“நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!”
— என்று அக்காலத் தமிழர்களின் நெஞ்ச அவலங்களைச் சுமந்த நம் பாவலரேறு ஐயா அவர்களின் கொதிப்புரையே, அவ்வரம்பனின் — சூதனின் — பூதனின் — உடலைத் தெறிக்கச் செய்தது.
மூன்றாண்டுகள் கழித்து முட்டிய சாவத்தின் நிகழ்வையும், காரணிகளையும் விளக்கித் ‘தென்மொழி' (1991, 1992 - சூலை, செப், நவம், சன.) இதழ்களில் எழுதப் பெற்ற ஆசிரியவுரை அக்கால அரசியல், குமுகவியல் அழுத்தங்களை அளாவித் தொகுத்தளித்த நேரியவுரை.
புற நிகழ்வுகளை மட்டும் காணும் கிறுக்கர்களின் கிறுக்கல்கள் அல்ல அவை.
அரசியல், குமுகவியலில் ஐயா அவர்களின் ஆழப்பதிவே —அவர்தம் பாக்களில் முட்டியும், உரைகளில் அளாவிச் சுட்டியும் காட்டப் பெற்றுள்ளது.
பொய்யாய்ப் போலியாய்க் குவிந்து கிடக்கும் எழுத்துக் குவியல்களுக்குள் மெய்யாய் எழுதப்பெற்ற இத்தகைய ஆழ்ந்த அரசியல் இலக்கியப் படைப்பு மக்களால் ஒப்பிட்டு உணரப் பட வேண்டியவை.
பலரும் கேட்டுக்கொள்ள, அதனைத் தனி வெளியீடாய்க் கொண்டு வந்துள்ளோம்.
தமிழர் இனத்தின், வாழ் நிலத்தின் உரிமை மீட்புக்கான தொடர்பணியில் இச்சிறு வெளியீடு பெரும் பயனைக் கொண்டது என்பதை எண்ணி இவ்வெளியீட்டால் நிறைவுறுகின்றோம்.
2024 — கன்னி — 15
—வெளியீட்டுக் குழு,
1.10.1993 தென்மொழி, சென்னை - 5