பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


அதுபோல, ஓமந்தூராருக்கு ஏற்பட்ட போட்டியின் என்ன காரணம் கூறப்பட்டது? வெற்றிக் களிப்பு அடைந்தவர்கள், தோல்வியால் துவண்டவர்கள். ஆகிய இரு தரப்பினருமே இந்தக் காரணத்தை நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. இந்தப் போட்டி, மக்கள் பொதுமன்றத்திலே நடைபெற்றிருந்தால்,ஓரளவுக்காவது, இந்தக்காரணம் என்ன என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்க முடியும். போட்டியோ, தாளிட்ட கதவுக்குப் பின்புறம், மண்டபத்துக்குள்ளே இரு படை வரிசை மட்டுமே தங்கியிருந்த முகாமில், நடைபெற்றது. முடிவு மட்டுமே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது- உள்ளே நடைபெற்ற 'விவாதம்" மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஏன்? தெரிவித்திருந்தால், பிரச்னை, வேறு உருவாகிவிட்டிருக்கும். போட்டி, ஓமந்தூராருக்கும் பிரகாசம்காருவுக்கு மிடையே அல்ல-இருவரும், இருவிதமான சக்திகளின்' பிரதிநிதிகளாக இருந்து, போர் நடைபெற்றது என்ற சூட்சமம்; வெட்ட வெளிச்சமாகி விட்டிருக்கும். சூட்சமத்தை, மிகமிகச் சாமர்த்தியமாகவே மறைத்துப் பார்த்தனர். ஆனால் அதிலே முழுவெற்றி கிடைக்கவில்லை. சூட்சமத்தை மக்கள் சற்றுப் புரிந்து கொண்டனர், காரணம் ஏதும் காட்டப்படாமல் நடத்தப்படும் இக்கடும் போருக்கு, உள்ளூர ஓர் காரணம் உண்டு என்பதை யூகித்தறிந்து கொண்டனர். அறிந்ததும்,ஓர் முழக்கம் கிளம்பிற்று, மண்டபத்தருகே! அந்த முழக்கம், அமைச்சர் டாக்டர் சுப்பராயனின் உள்ளத்தை உருக்கி விட்டதாம் - காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலிருந்ததாம் அந்தக்கூச்சல்! கூச்சல் மந்திரியார் கூறுகிறார் அதுபோல், மக்கள் கூறுகின்றனர். முழக்கம் என்று. வருமுன் உரைப்போர் கூறுகின்றனர் எச்சரிக்கை என்று பெயர் எப்படியோ கிடக்கட்டும். இந்தப் போட்டியின் முடிவு தெரிந்ததும் மக்கள் பிராமணர் ஒழிக என்று கூச்சலிட்டனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தக்கூச்சலிட்டவர்கள், காங்கிரஸ்காரர்களேதான் என்பதையும் டாக்டர் தெரிவிக்கிறார்.

காங்கிரஸ் கட்சியிலே தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வெளிப்படையாக உருவான ஒரு காரணமும் கூறப்படவில்லை.