பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இப்படி குடைவரை, கற்றளி, மாடக்கோயில் என்றெல்லாம் வகைப்படுத்தும் முறை ஒருபுறம் இருக்க, நாவுக்கரசர் ஒரு புதிய முறையை அவரது அடைவுத் திருத்தாண்டகத்தில் குறித்திருக்கிறார்.

பெறுக்காறு சடைக்கணிந்த
பெருமன் சேரும் பெருங்கோயில்
எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ்
ஞாழல் கோயில், கருப்பறில்
பொருப்பனைய கொடுடிக் கோயில்
இருக்கோதி மறைவர்கள்
வழிபட்டு ஏத்தும் இளங்கோயில்
மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவன் உறையும்
கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்சத்
தீவினைகள் தீரும் அன்றே?

என்பது அப்பர் பாடல். இந்தத் தேவாரப் பாடலிலே சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயில்களைக் குறிப்பதோடு, கரக்கோயில் ‘ஞாழற் கோயில், கொடுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்’ என்று ஆறுவகைக் கோயில்களைக் கூறுகிறார். இந்த ஆறு வகைக் கோயில்களையே சில்ப நூல்களில் விஜயம் ஸ்ரீபோகம், ஸ்ரீவிலாசம். ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம், ஹஸ்தி பிருஷ்டம், கேசரம் என்று வடமொழிப் பெயரிட்டு கூறப்பட்டிருக்கிறது. இவைகள் எவை, எவை என்று நிர்ணயிக்கும் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடாக இல்லை.

146