பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கூறப்பட்டிருந்தது. இதை நான் படித்தபோது இதெல்லாம் வியாசருடைய கற்பனையாயிராது, இதில் ஏதோ வாஸ்தவம் இருக்கவேண்டுமென்று எண்ணினவனாய், இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தபோது, தஞ்சாவூர் சரபோஜி ராஜாவின் சரஸ்வதி மஹால் புத்தக சாலையில் ஓர் பழைய ஏட்டுச் சுவடியில் இதைப்பற்றி கூறியிருப்பதைக் கண்டறிந்தேன். அதை மிகவும் கஷ்டப்பட்டு படித்தபோது, இதன் இரகசியத்தையறிந்தேன்.

அ. உம்-தெரிகிறது.

வி. கவர்ன்மெண்ட் உத்யோகத்திலிருந்து நான் விடுவித்துக்கொண்டதுமுதல் இதைப்பற்றி ஆராய்ச்சிசெய்து வந்தேன். இப்பொழுது ஏறக்குறைய இந்த இரகசியத்தை முற்றிலும் கண்டு பிடித்துவிட்டேன் என்றே சொல்லலாம். இதைப் பூரணமாய் முடிக்க ஒரு சிறு விஷயம்தான் பாக்கியிருக்கிறது.

அ. அது என்ன அது ?

வி. இந்தக் கண்ணாடிக் குழாயில் ஒரு சிறு குண்டு இருக்கிறது தெரிகிறதா? அதனுள், ஐந்து மைல் விஸ்தீரணத்திற்குள் இருப்பவர்களை யெல்லாம் கொஞ்ச காலம் மெய்ம்மறந்து போகும்படிச் செய்யவல்ல சக்தி அடங்கி யிருக்கிறது. இதில் கஷ்ட மென்னவென்றால், ஒரு பீரங்கியிலோ, பெரிய துப்பாக்கியிலோ இதை வைத்துச் சுட்டால், அந்த குண்டு ஐந்து மைல் போகும் வரையில், அது உடையாமலிருக்க வேண்டுமென்பதே - அதைத் தான் இப்பொழுது கடைசியாகக் கண்டு பிடிக்க முயன்று வருகிறேன்.

அ. அதைக் கண்டு பிடித்தபின்-இதை எப்படி உபயோகிக்கப் போகிறாய்? இந்த உள் இரகசியத்தை ?

வி. ஏன் ? உங்களுக்குத் தெரியவில்லையா? உலக முழுவதையும் ஒரே யுத்தகளமாக்கிவரும் இந்தக் கொடிய யுத்தத்தை, இது நிறுத்தி விடாதா?

அ. அல்லது, இந்த உலக முழுவதையுமே, அழித்துவிடக் கூடுமல்லவா?