பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. கடல் ஆராய்ச்சித் திட்டம்

பெயர்

இந்தியக் கடலின் இயற்கை வளங்களை ஆராயத் திட்டம் ஒன்று உலக அளவில் வகுக்கப்பட்டது. இதற்கு அனைத்துலக இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம் என்று பெயர்.

தோற்றம்

இத்திட்டம் கரு நிலையில் 1957ஆம் ஆண்டிலேயே உருவாயிற்று. ஆனல் முழு நிலையில் உருப்பெற்றது 1959ஆம் ஆண்டில்தான். அனைத்துலக அறிவியல் கூட்டுக் கழக மன்றம், யுனெஸ்கோ, அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் நன் முயற்சியினால், அனைத்துலகக் கடல் நூல் பேரவை 1959இல் செப்டம்பர்த் திங்களில் நியூயார்க்கில் கூடியது: கடல் நூலை அறிவியலாக-விஞ்ஞானமாக-மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது.

அவைக் கூட்டத்தில் 45 நாடுகளிலிருந்து 1,100 அறிவியலார் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்துலக இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பல பணிகளைச் செயற்படுத்தும் அலுவலகம் நியூயார்க்கில் உள்ளது. இத்திட்டத்தைப் பல அறிவியலார் கொண்ட ஒரு தனிக் குழு வகுத்தது.