பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெய்யச் செய்வதற்கு மந்திரம், வளர்ந்த பயிரை வாழ்த்துவதற்கு மந்திரம் என்று பல சடங்குகள் அமைந்திருக்கின்றன. பயிர்களை வாழ்த்தும் சடங்கில் பல துறவிகள், ஏராளமான மக்கள் புடை சூழ, சமய நூல்களின் நூற்றெட்டுப் பகுதிகளையும் சுமந்து கொண்டு கிராமங்களில் ஊர்வலம் வருவார்களாம். அரசாங்கக் காரியங்களுக்கும் மந்திரிகள் குறி கேட்பது வழக்கம். நாட்டிலே பொற்சுரங்கங்கள் ஏராளமாயிருக்கின்றனவாம். ஆனால் பூமியிலிருந்து பொன்னை வெட்டியெடுத்துச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளும் முறை மக்களுக்குத் தெரியாது. அதில் அவர்களுக்கு ஆசையுமில்லை, அக்கறையுமில்லை. தலைநகரிலும் சுற்றியும் ஒடும் ஓடைகளின் நீரில் தங்கத் துகள்கள் மின்னி மிதந்து கொண்டிருந்த போதிலும் அவைகளைக் கவனிப்பாரில்லை.

குடும்பத்திற்கு ஒருவராவது துறவியாவதாலும், பலதார மணத்தாலும், ஒருத்தி பல ஆடவரை மணந்து கொள்ளும் முறையாலும், அதிகமான குழந்தைகளின் மரணத்தாலும், தக்க நவீன வைத்திய சிகிச்சை இல்லாததாலும், திபேத்தில் மக்களின் தொகை அதிகமாய்ப் பெருகுவதில்லை. ஜனத்தொகை தொன்று தொட்டு ஒரே நிலையில் இருந்து வருவதுபோல் தோன்றுகிறது.

நீதி முறை

திபேத்தில் கொலைக்குற்றம் செய்தவர்களுக்குக் கூட மரண தண்டனை கிடையாது. ஆனால் கசையடி அடிப்பார்கள். அந்த அடிகளிலேயே உயிர் பிரிவதும் உண்டு. களவு, கொள்ளை, மோசடி முதலியவற்றிற்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப் பெறுகின்றன. கொள்ளைக்காரரின் கால்களோ, கைகளோ வெட்டப்

213