பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

111

மூவர் எனக்கு உறுதுணை யாயினர். ஒருவர், என்னைப் போற்றிப் புரந்த-தமிழவேள்; மற் றொருவர் என் பேராசான் ‘கரந்தைக் கவியரசு’; மூன்றாமவர், என் வாழ்விலும் தாழ்விலும் பங்கேற்று நானும் எனது நிழலும் போல, நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும் உள்ளத்தால் இணைந்திருந்த சிவ. குப்புசாமிப் பிள்ளை(இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆசிரியர்)


என்பது உரைவேந்தர் கூற்று.

தன்னை ஈன்ற அன்னையார் இறந்தபோது கூடக் கண்ணீர் சிந்தாத உரைவேந்தர், தமிழவேள் உமாமகேசுவரனார் வடபுலப்பயணம் மேற்கொண்டபோது, ‘பைசாபாத்’ என்னுமிடத்தில் திடீரென இயற்கை எய்தினார் என்று கேட்டதுமே கண்ணீர் சிந்தித் தன் உள்ளத்திலிருந்த துயரை வெளிக்காட்டினார். அப்போது உரைவேந்தர் பாடிய இரங்கற்பாக்களில் ஒன்று:

                         “தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
                                அறிவளித்தான்; சான்றோ னாகி
                          ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்;
                                அவ்வப்போதயர்ந்த காலை,
                          ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
                                 இனியாரை யுறுவேம்; அந்தோ!
                          தேயாத புகழான்தன் செயல் நினைந்து
                                 உளம்தேய்ந்து சிதைகின் றேமால்!”

அன்றியும், உமாமகேசுவரனாரின் நினைவை என்றும் போற்றும் வகையில் ‘உமாமகேசுவர விரதமும்’ கடைப்பிடித்து வந்தார் உரைவேந்தர்.

தமது ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த கல்வெட்டுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார்க்கும், வித்துவான் க.வெள்ளை வாரணனாருக்கும் நன்றி கூறுவார். மேலும்,

“அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பணிபுரிந் தொழுகிய எனக்குப் பல நல்ல வசதி யினைச் செய்து என் தமிழ்ப் பணிக்கு வேண்டும்