118
உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை
“அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
புதியதொரு ஆண்ஔவை’ எனவி யப்பான்!
பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
அளித்துங்கள் மேனியினைக் காதலிக்கும்
முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி
மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!”
கற்பனை நயம் செறிந்த புகழ்ப் பாட்டு இது!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடத்துப் பெருமதிப்புக் கொண்டவர் உரைவேந்தர். அதனால் கவிஞர் எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் குறுங்காப்பியத்தின் சிறப்பினை ஆராய்ந்து, பாவேந்தரைப் பாராட்டிப் ‘பாரதிதாசன் மலரில்’ கட்டுரை எழுதியுள்ளார். அவ்வாறே புரட்சிக் கவிஞரும், உரைவேந்தர்பால் அளவற்ற மதிப்புக் கொண்டிருந்தார். ஒரு முறை நாகர்கோயிலில், ‘புலவர் குழு’ கூடியிருந்தது. பாரதிதாசன், தம் நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்பக்கமாக உரைவேந்தர் வரக் கண்ட கவிஞர், தம் நண்பர்களிடத்து, ‘தமிழ் மணம் வீசுகிறதே...ஓ!..... ஔவை துரைசாமி பிள்ளையவர்கள் வருகிறார்களோ?’ என நகையும் உவகையும் கலந்து பாராட்டினார்!
“பள்ளிமுதல் பல்கலைச்சாலைவரைபாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடை மழை-வெள்ளத்தேன் பாயாத ஊருண்டோ! உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்!”
என்று. வாயார வாழ்த்துகின்றார் புரட்சிக் கவிஞர்!
மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார்,
“கடவுட் பற்றும், சைவத்தெளிவும், பொது நோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், முதுமை மறப்பிக்கும் இளைய வீறுபெற்று இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரை கண்ட பெருஞ்செல்வம்-தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணாச்-