பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


                               “உரையும் பாட்டும் உடையவராய்
                                      உள்ளந் தன்னில் ஆட்சிசெயும்
                                உரையின்வேந்தர் புகழ்பாடி
                                      உள்ளத் துவகை கொள்வோமே!”

என்று மகாவித்துவான் ம.அமிர்தலிங்கனாரும்,

                             “சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல்
                                   சைவசித் தாந்தத்தின் திலகம்;
                              மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும்
                                   வான்சுடர், வள்ளலார் நூலின்
                             இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி
                                   இமயத்தைப் புலமையால் தாழ்த்தும்
                             துங்கமார் ஔவை நம் துரைசாமித்
                                   தோன்றல்...!”

என்று பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரும், உரைவேந்தரின் புகழ் பாடுவர்!

சித்தாந்த சைவத்தை உரையாலும், கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய் அருமை நோக்கி உரைவேந்தருக்குத் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையார், “சித்தாந்த கலாநிதி” (சித்தாந்தக் கலைக்கூடம்) என்னும் சமயப் பட்டமளித்துப் பாராட்டினர்.

மதுரை மாநகரில், 1941 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘மதுரைத் திருவள்ளுவர் கழகம்’ தமிழுக்குச் சிறப்பாகத் தொண்டு செய்து வருவது. ஆண்டுதோறும் தக்க தமிழ்ப் புலவர்களைப் பாராட்டு முகமாகப் பட்டம் வழங்கிச் சிறப்பித்து வருவது. அவ்வகையில், ச.சாம்பசிவனார், செயலராக இருந்த போது, உரைவேந்தர், சில ஆண்டுகள் தொடர்ந்து,வாரந்தோறும் ‘சைவசித்தாந்தச் சொற்பொழிவு’ நிகழ்த்தி வந்தார்; எந்த விதக் கைம்மாறும் கருதாமல் இதனை ஆற்றி வந்தார். நூற்றுக் கணக்கானோர், சைவசித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள இவரது சொற்பொழிவு பெரும் பயன் விளைவித்தது. அதே வேளையில் இவரது அறுபதாம் ஆண்டு நிறைவெய்தியது. இம் ‘மணிவிழா’ வைச் சிறப்பாகக் கொண்டாட விரும்பிய கழகம், 1964ஆம் ஆண்டு சனவரி 14,15,16 ஆகிய நாட்களில் நிகழ்ந்த ‘தமிழ்த் திருவிழா’வோடு ‘மணிவிழா’வையும் இணைத்துக் கொண்டது.

இவ்விழாவை முன்னிட்டு, இவரின் தொண்டுகள் குறித்துத் ‘துண்டறிக்கை’ ஒன்று செயலரால் தயாரிக்கப்பட்டுப் பலர்க்கும் வழங்கப்பட்டது.