பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
பேராசிரியப் பெருந்தகை

“பலதிறப்பட்ட பொதுநலப் பணிகளிலும் ஆசிரியப் பணி அருமை வாய்ந்தது. அதற்குரிய பண்புகள், படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல! பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. ‘குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை, கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை, நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூல் உரை ஆசிரியன்’ என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னுல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள்(உரைவேந்தர்) இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர் ஆசிரியராவார், மாணவர் உள்ளத்தில் தம்மாட்டுத் தனி மதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல் வேண்டும். அவர்க்கு இன்றிமையாத அடிப்படைப் பண்பு, அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், தெளிவான திருத்திய உச்சரிப்பு, அரிய கருத்துக்களையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவையனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப்பண்புகள், மாணவர்களை அவரிடம் அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாண வர்களை அவரிடம் பக்தியும் பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும், அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்ததில்லை!”