பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

37

கரந்தையில் இருந்தபோது, மேற்கூறிய தொல்காப்பியம்- தெய்வச் சிலையார் உரையுள்ள ஏட்டினைப் படிப்பதும் அதனைப் பெயர்த்து எழுதலுமாகிய பணிகள் தரப்பட்டன. பின்பு, 'தமிழ்ப் பொழில்' இதழில் தொடர்ந்து அது வெளிவந்தது. அப்போது இதழாசிரியராக இருந்த 'கவியரசு' அரங்க. வேங்கடாசலம் பிள்ளை, அந்த ஓலைச்சுவடி படிப்பதில் உரைவேந்தருக்கு இடையிடையே எழும் ஐயங்களைப் போக்குவதிலும், பிற உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரை நலங்களை ஒப்பிட்டு விளக்கம் அளிப்பதிலும், உரைவேந்தருக்குப் பெருந்துணை புரிந்தார்.

ஏடு படித்தல், பெயர்த்தெழுதல் முதலானவற்றில் போதிய பயிற்சி பெற்ற உரைவேந்தர், கல்வெட்டறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தாரின் உதவியால் கல்வெட்டுக்களைப் படிப்பதிலும், 'படி' எடுப்பதிலும் திறமை பெற்றார். இதற்கான சான்று ஒன்று:

மதுரைத் தமிழ்ச் சங்கச்செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த ச. சாம்பசிவனார், புலவர் இறுதியாண்டு மாணவர்கட்குத் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் பாடம் நடத்த வேண்டியிருந்தது. மதுரைக்கு அருகே உள்ள ஒற்றைக்கடை மலையடிவாரத்தில் நரசிங்கப் பெருமாள் கோயிலைப் பற்றிய கல்வெட்டும் பாடத்தில் இடம் பெற்றிருந்தது. இதுபற்றி மாணவர்கட்கு நேர்முகப் பயிற்சி அளிப்பதற்காகச் சங்கச் செயலர் 'அற நெறியண்ணல்' கி. பழநியப்பனார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், வகுப்பு மாணவர்கள் ஆகியோருடன் உரைவேந்தரையும் உடன் அழைத்துக்கொண்டு கல்வெட்டுப் படி' எடுப்பதற்கான கரி, மெல்லிய தாள் முதலான கருவிகளுடன் ஆங்கே சென்றோம். உரைவேந்தர், அக் கல்வெட்டைப் படித்துப் பாடநூலோடு ஒப்பிட்டுக் காட்டி விளக்கமளித்ததுடன், அதனை எவ்வாறு 'படி' எடுப்பது என்பதையும் செயல்முறைப் பயிற்சியால் செய்து காட்டினார். ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் பெரும் பயனாக அமைந்தது!

இவ்வாறு கல்வெட்டில் நல்ல பயிற்சியும், திறமையும் பெற்றதனால்தான், உரைவேந்தர் தாம் எழுதிய பல்வேறு நூல்களிலும் ஆங்காங்கே கல்வெட்டுச் சான்றுகள் தந்து, மெய்ப்பிக்க முடிந்தது!

நூல்களும் உரைகளும்

முன்னர்க் காட்டியவாறு உரைவேந்தர் எழுதிய நூல்கள் முப்பத்து நான்கு எனத் தெரிய வருகின்றது. இவற்றில் சிலவற்றைப் பற்றி