பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


கடவுள் வழிபாட்டிலும், தமிழ்மொழிக்கு இடமில்லாது போனது பற்றியும் உரைவேந்தர் சிவஞானபோதச் சிற்றுரைப் பதிப்பில் இப்படிக் கூறுகின்றார்:

“வைதிக நூல்களும் சைவ நூல்களும் செய்து கொண்ட பூசலால் சிவவழிபாடு சீரழிந்தது. புறச் சமயங்கள் தோன்றி, தொண்டை நாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டன. சமயவாதிகள் மேற்கொண்டிருந்த வடமொழியே, அவரது சமயம் போல அரசியலைக் கைப் பற்றியது. ஆரியம் எனப்படும் வடமொழி, சமய நிலையங்களிலும் அரசர் உள்ளத்திலும் இடம் பெற்றது. தொண்டை நாட்டில் பல்லவர்களின் அரசியல் மேலோங்கியிருந்தமை யின், காஞ்சி, மதுரை முதலிய பல இடங்களில் வடமொழி பயிற்றும் பல கடிகைள் (கல்லூரிகள்) உளவாயின. இதனால், மக்கள் பேசும் தமிழ்மொழி, கடவுள் வழிபாட்டிலும், அரசர் செல்வாக்கிலும் போதிய இடம் பெறாதொழிந்தது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களிடையே சமய வுணர்வும், சமய ஒழுக்கமும் குன்றின! வடமொழியையும் அதன் சிதைவு மொழியையும் மேற்கொண்டு, மக்கள் வழங்கும் தமிழ்மொழியைப் பேணாதொழிந் தமையால், வைதிக நெறியும் பெளத்த சமண நெறியும் வேரூன்றாது வறிதே நின்றன!”

சொல்வன்மை

தமிழகத்தில், கற்பிக்கும் திறன் பெற்று ‘நல்லாசிரியர்களா’க விளங்கியோர் பலர்; ஆனால் இவர்களில் பலருக்கு எழுத் தாற்றலும், மேடையேறிப் பேசும் பேச்சாற்றலும் வாய்ப்பதில்லை. அவ்வாறே, சிறந்த எழத்தாற்றல் உடையோருள் பலர், மேடையேறிப் பேசும்திறன் பெற்றாரிலர். பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், நாவன்மை எனும் இம்மூன்று திறனும் ஒருவரிடம் ஒருங்கே அமைதல் அரிது அரிது! ஆனால் இம்முத்திறனும் ஒரு சேர முழுமையாக வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர்.