பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

99

இவ்வாறு எழுதுபவர், சில இடங்களில் நீண்ட தொடர்களையும் கையாள்கின்றார்.

“தெளிந்தாரைச் சேராமையும், ஒருகால் சேரின், தெளிந்தாரது தெளிவைக் கெடுத்துத் தெளியாமை இருளில் அழுத்துவதும், இவ்வகையால் வீழ்ந்தாரை மேன்மேலும் வீழ்த்துவதும், உயர்ந்தாரையே உயர்த்துவதும் செல்வத்துக்குப் பொது இயல்பு!”

(தூத்துக்குடி சைவசித். சபை விழாத் தலைமை)

“சிவபரம்பொருளின் செம்மைநலம் முற்றும் செம்மையாம் ஓதும் செம்பொருட் செந்தமிழ்ப்பாட்டு இச்சிவபுராணம் என்பது சாலும்”

(ஆம்பூர் சைவசித்தாந்த விழா உரை)

“கடலளவுக்கு 2800 அடி உயரத்தில், மலை முகட்டில் தோன்றி, 60 கல் அளவு மலையிடையே நெளிந்து, வளைந்து, தவழ்ந்து, தாவித்துள்ளிப் பரந்து வரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சிநல்கும்!”

(பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு)

“இயற்கையன்னை கோயில் கொள்ளும் இடம்- மலை நாடான குறிஞ்சி; அவள் தனது அருளழகை விளக்குமிடம்- முல்லை;கொலு வீற்றிருக்கும் திருவோலக்கம்-மருதம்; அவள் மகிழ்ந்து விளை யாடி மாண்புறும் இடம்- நெய்தல்!”

(நந்தாவிளக்கு)

“இதன்கண் மூவாதாரும் மங்கையரும் முறையே முன்னும் பின்னும் செல்ல, தொண்டர்கள் புடை சூழ, இடையே ஆரூர் இறைவன் செல்கின்றா னென்பது எத்துணை இன்பமாகவுளது காண்மின்! இக்கூட்டத்தில் உயர்ந்தோர் உயர்வும், தாழ்ந்தோர் தாழ்வும் மதிக்கப்பட வில்லை!"

(ஞானவுரை)