பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

147


இத்தகைய சந்தர்ப்பங்களில் இந்திரா தரும சங்கடத்தின் உச்ச நிலையில் தவித்தாள் எனலாம். அவள் கணவரை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால், “என் கணவர் இங்கு அவமானம் செய்யப்பட்டார். அவரிருக்குமிடம் தான் எனக்கு அயோத்தி. இந்த விநாடியே நான் இந்த மாளிகையை விட்டுப் போகிறேன்” என்று நாடக, சினிமா, கற்புக் கதாநாயகிகளைப்போல் வெளியேறவில்லை.

கணவரின் தன்னுணர்வு, நேருவுக்கு நெருங்கிய முக்கிய நண்பர்கள் விருந்தாளியாக வந்த நேரங்களில் கூட முனைந்து, மாமனாரை அலட்சியமாகக் கருதச் செய்ததை இந்திரா விள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் ஏற்று, சமாளித்துத்தான் ஆகவேண்டி இருந்தது. ஃபெரோஸ் தமக்கென்று ஓர் இல்லம், நண்பர்கள் என்று சுயேச்சையாக இருந்தார்.

லோக் சபாவில் எதிர்க்கட்சி அணிபோன்றே செயல் பட்டதனால், நேரு, இன்சூரன்ஸ் தொழிலை தேசியமயமாக்கினார். தேசிய மயமாக்கப்பட்ட காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளைப் பயன்படுத்திய முறைகேட்டை, மீண்டும் தட்டிக் கேட்டு அம்பலத்துக்குக் கொணர்ந்தார். அன்றைய நிதி மந்திரி ஊழலுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் அளவுக்குப் போயிற்று. இந்த நியாயங்கள் அனைத்துக்கும் இந்திராவின் கணவன் ஃபெரோஸ் தாம் பொறுப்பாளி. ஆளும் கட்சியேயானாலும், அன்றைய இத்தகைய கட்சிக்குள் இருந்த ஜனநாயகப் பண்பு மிகவும் பாராட்டக் கூடியதாகும்.

வீட்டுக்குள் என்று வரும்போது, ஃபெரோஸின் அலட்சியம், இந்திராவுக்கு முள்ளாகவே உறுத்திற்று. கருத்து வேற்றுமை இயல்புதான். விமரிசனம் தவறில்லை. ஆனால் அதுவே முனைப்பாக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற போது, அது பிளவுக்கும் அடிகோலுவதாகவே ஆயிற்று.