பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை

 நாட்டில் முன்குறிப்பிட்ட புரட்சி நடப்பைப் பற்றிக் கற்பனை கூடச் செய்ய முடியாது. எனவே இந்தியப் பொதுஉடமைக் கட்சி, ஜனநாயகத் தேர்தலில் போட்டி இட்டு, முறைப்படி கேரளமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்ய வந்திருந்தது. எனவே இந்த நிகழ்ச்சி, உலக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.

இந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்ததும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தாங்கள் வாக்களித்தபடியே செயல்படலாயினர். அமைச்சர்கள் தனியான ‘கனம்’பெற்று படகுக் கார்களில் பவனி வரவில்லை. மக்களோடு மக்களாக எந்தவொரு ஆடம்பரமுமின்றி, ஆட்சி செய்யலானர்கள். நிலச்சீர்திருத்தம், கல்வி மேம்பாடு என்று மளமளவென்று வாக்குறுதிகள் தேர்தல் நேரச் சொல்லலங்காரங்களல்ல என்று அவர்கள் நிரூபிக்க முற்பட்டனர். ‘அந்த நாளைய தியாகங்கள்’ என்ற குதிரையிலேறிச் சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளருக்கு அடிவயிற்றில் கிலி பிடித்தது. இந்தக் கேரள முன்னோடிகளை இப்படியே செயல்படவிட்டால், இவர்களுடைய பொய்க்குதிரைகளின் கதி என்னவாகும்?

ஆனால், டெல்லியில் பிரதமராகப் பதவி வகிப்பவர் யார்?

ஜவாஹர்லால் நேரு…

1927ம் ஆண்டு சோவியத் நாட்டின் பொதுவுடமைப் புதுமைகளைக் கண்டு கிளர்ச்சியுடன் மகளுக்கு எழுதியவர். முதலாளித்துவத்துக்கும் நில உடமைப் பிரபுத்துவத்துக்கும் கடும் எதிரி என்று தன்னை இனம் காட்டிக் கொள்ள சமதர்ம மந்திரம் ஓதுபவர். உலகத் தலைவர்களிடையே ‘ஆசியாவின் ஜோதி’ என்ற புகழ் பெற்றவர்.

இவருடைய தலைமையில் இவர் கண்முன் நியாயமாக ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கும் பொது உடமை