158சு. சமுத்திரம்
சம்பாதிச்சா உனக்கு பணத்தோட அருமை தெரியும். வேல வெட்டி இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறவளுக்கு என்ன தெரியும்? சரி, சரி, அவளைக் கூட்டிக்கிட்டு வா!”
“நில்லுங்க அப்பா...”
வெளியே போய்க்கொண்டு இருத்தவர் திடீரென்று நின்று, மகள் மல்லிகாவை ஏறிட்டுப் பார்த்தார். அவள் காபி தம்ளர்களையும், பிஸ்கட்டுகளையும் சுமந்த டிரேயைக் கீழே வைத்துவிட்டுத் தந்தையை நோக்கினாள். தந்தையிடம் சொன்னாள்:
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல! நீங்களா போய் சொல்றீங்களா... நானே சொல்லட்டுமா...?”
“என்னம்மா இது? உனக்குமா கோளாறு...”
“கோளாறு இல்லப்பா! அது தெளிஞ்சிருக்கு... உங்களையும், உங்க பெற்றோரையும் தஞ்சமுன்னு வந்து, கடைசில உங்க குடும்பத்துக்கே தஞ்சம் கொடுத்த அம்மாவ சம்பாதிக்காதவள்ன்னு சொல்லி ஒரு டாக்டரையும், பேராசிரியரையும் உருவாக்கின. அவளோட உழைப்பை உதாசீனப்படுத்திட்டீங்க. கிராஜுவேட் அம்மாவுக்கே இந்த நிலைமைன்னா, அண்டர்-கிராஜுவேட்டான எனக்கு எந்த நிலையோ? படித்து முடித்து வேலைக்குப் போகாமல் இந்தப் பையனைக் கட்டி வீட்டுக்குள் முடங்கி உங்ககிட்டே அம்மா வாங்கிக் கட்டிகிட்டதுமாதிரி நான் வாங்கிக்கத் தயாராயில்ல!”
“உங்கம்மா, சித்தப்பாவ துரத்தினது உனக்கு பெரிசா தெரியல!”
“துரத்தவேண்டிய ஆசாமியைத் தான் அம்மா தொரத் திட்டாங்க நன்றி கெட்டவங்களுக்கு இந்த வீட்டுல இடம் கிடையாது.”
“எனக்கு வாரக் கோபத்துக்கு உன்ன...”