பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

இசை சிலருக்கு இன்பம் அளிக்கலாம். சிறந்த காவியமும் ஓவியமும் சிலருக்கு இன்பமாகத் தோன்றலாம். வீரமே இன்பம் என்று பலர் கருதலாம். நவநவமாகப் பல பொருள் கண்டு பிடிப்பது இன்பம் என்று எத்தனையோபேர் எண்ணலாம், ”காதலனும் காதலியும் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்” என்று பலர் பாடிக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்னும் எத்தனையோ பேர் எதை எதையோ இன்பம் என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். அவைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவைகளை நாம் ஆராயப்போவதுமில்லை, ஆகவே, இனி எது உண்மையான இன்பம் என்று தீர்மானிக்க வேண்டியதே என்கடமையாகும், என் தீர்மானங்களைப் போல் சரியாகவும் இருக்கலாம் சில தீர்ப்புக்களைப் போல சரியில்லாமலும் இருக்கலாம்! எனக்குத் தோன்றுவதை நான் என் தீர்மானமாகச் சொல்லு கிறேன். நீங்கள் அதை உங்கள் விரும்பம்போல ஏற்றுக்கொள்ளலாம்!

உலகத்தில் தக்கார்க்கு அறம்செய்வதால் உண்டாகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். “அறத்தால் வருவதே இன்பம் மற்றவை, புறத்த, புகழுமில” என்று திருக்குறளை உபமானமாகவும் எடுத்துக் காட்டுவார்கள். உண்மைதான் கதியற்றவர்களுக்குச் செய்த உதவிக்குப் பதில் உதவிசெய்யச் சக்தி அற்றவர்களுக்கும், இன்னும் இவர்களைப்போன்ற