பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சுந்தர சண்முகனார்



சிலர், கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் தஞ்சை மாவட்டமாகிய காவிரி நாட்டைச் சேர்ந்தவரல்லர்; அவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் - திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர்; அவர் கம்பரை ஆதரித்தது அவ்வூரில்தான் - என வன்மையாக அடித்துப் பேசுகின்றனர். இக்கொள்கை சரியன்று. சடையன் காவிரியோடும் சோழ மண்டலத்தோடும் பாடல்களில் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதால், அவன் தஞ்சை மாவட்டத்து ஊர்க்காரனே யாவான்.

எனவே, தஞ்சை மாவட்டத்துப் புதுவையும் (புதுச்சேரியும்), திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் என்னும் புதுவையும், தலைநகர்ப் புதுச்சேரிக்குத் (புதுவைக்குத்) தெற்கே உள்ளவை என்பது பெறப்படும்.

6.5 புதுச்சேரிச் சடையன்

ஒரு சிலர் கம்பரை ஆதரித்த சடையன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவனே என அடித்துப் பேசுவது போல, ஒரு சிலர், புதுவைச் சடையன் என்பது, புதுவை மாநிலத் தலைநகர்ப் புதுச்சேரியாகிய புதுவையைச் சேர்ந்தவனே என அடித்துப் பேசுகின்றனர்.

யான் இந்த இருசாராரிடமும் வாதாடிப் பார்த்தேன். சடையன், காவிரியோடும் சோழ நாட்டோடும் பல பாடல்களில் தொடர்புறுத்தப்பட்டிருப்பதல்லாமல் சோழ மன்னனோடும் தொடர்புறுத்தப்பட்டிருப்பதால், பாடல்களில் கூறப்பட்டுள்ள வெண்ணெய் நல்லூரும் புதுவையும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தனவே எனச் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.

இலங்கையில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் சடையன் கப்பல் கப்பலாய் அரிசி அனுப்பியதால், இலங்கை மன்னன்