பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

சுந்தர சண்முகனார்


செய்தியை விரைவில் சொல் என்று வினவினாள். நீலமாலை சொல்லத் தொடங்கினாள்:

நால்வகைப் படையைக் கடல்போல் மிகுதியாக உடையவன்; கல்வியில் சிறந்தவன்; தயரதன் என்னும் பெயரினன்; முகில்போல் வழங்கும் கையன். அவனுடைய மகன் மன்மதனினும் சிறந்த அழகுடையவன். பாடல்:

“கயரத துரகமாக் கடலன் கல்வியன்
தயரதன் எனும் பெயர்த் தனிச்செல் நேமியான்
புயல்பொழி தடக்கையான் புதல்வன் பூங்கணை
மயல்விளை மதனற்கும் வடிவு மேன்மையான்” (58)

‘இராமன் வில்லை முறித்தான்’ என மூன்று சொற்களால் செய்தியைத் தெரிவித்திட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், நீலமாலை சீதையின் ஆவலைத் தூண்டி மேலும் வளர்த்துகிறாள்:

மராமரம் போன்ற திண்ணிய தோளினன்; அரவணைத் திருமாலோ என ஐயுறும் ஆற்றலன்; இராமன் என்பது அவன் பெயர். அவன் தம்பியொடும் முனிவரொடும் மிதிலைக்கு வந்தான்:

“மராமரம் இவையென வளர்ந்த தோளினன்
அராஅணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும்
பராவரு முனியொடும் பதி வந்து எய்தினான்” (59)

ஓர் ஆண்மகன் மற்றோர் இளைஞனுடனும் முனிவர் ஒருவருடனும் ஊருக்குள் வந்தான் என்று சொல்வதன் வாயிலாக, சீதை தெருவில் கண்ட காட்சியை நினைவுறுத்தி மேலும் ஆவலைத் தூண்டுகிறாள்: சிவனிடமிருந்து வந்த அந்த வில்லைக் காணவந்தவன் நாணேற்றினான். விண்ணுலகமே அதிர்ந்தது!