இயல் தமிழ் இன்பம்
117
பின்னர் இராமன் வில் ஒடித்த செய்தியைச் சீதைக்குத் தெரிவித்ததாகக் கம்பர் பாடியுள்ளார். இந்த ஆசிரியப் பாடலோ, வில் ஒடித்த ஒலியைச் சீதை தானே கேட்டதாகத் தெரிவிக்கிறது. இவ்வாறு சிறுசிறு வேற்றுமையுடன் பல்வேறு இராம காதைகள் இருக்கும் போலும்.
இந்த ஆசிரியப்பா இராமாயணத்தை மு. இராகவையங்கார் ‘பழைய இராமாயணம்’ எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஆசிரியப்பாவை நோக்கக் கம்பரின் நன்கொடை மிகவும் சுவையானதன்றோ!
இப்படி ஆசிரியப்பாவால் ஆன ஓர் இராமாயணம் உண்டு என்பதற்கு வலுவூட்ட மற்றும் ஓர் ஆசிரியப்பா இராமயணப் பாடலைக் காண்பாம்!
தொல்காப்பியம் - புறத் திணையியலில் உள்ள
“கட்டில் நீத்த பாலினானும்” (76.16)
என்னும் பகுதிக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையில் பரதனைப் பற்றிய செய்தி வருகிறது. அதாவது?
“கட்டில் நீத்த பாலினானும் = அரசன் அரச உரிமையைக் கைவிட்ட பகுதியானும். அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி.
(உ-ம்)
“கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ணக வளாகம் நுண்வெயில் துகளினும்
நொய்தா லம்ம தானே இஃதெவன்
குறித்தன னெடியோன் கொல்லே மெய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி யாங்கவன்
அடிபொறை யாற்றி னல்லது
முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே”
இஃது அரசு கட்டில் நீத்த பால்.” என்பது நச்சினார்க்கினியரின் உரைப் பகுதி. இராமனுடைய தம்பியாகிய