பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

201


அன்னவாம் உரையெலாம் அறிவினால் உணர்குவான்
உன்னையே உடைய எற்கு அரியது எப்பொருளரோ
பொன்னையே பொருவுவாய் போதெனப் போதுவான்
தன்னையே அனையவன் சரணம்வந் தணுகினான் (16)

‘உன்னையே உடைய’ என்பது பொருள் பொதிந்த தொடர். நீயே என் முழு உடைமைப் பொருள் எனவும், என் உடைமைப் பொருள்களுள் நீயே சிறந்த உடைமை எனவும், மிகவும் சிறந்தவனாகிய உன்னையே யான் உடைமையாக உடையேன் எனவும் இந்தத் தொடருக்குப் பொருள் கூறலாம். இங்கே புதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். அதாவது:

‘ஏ’ என்ற இடைச் சொல்லுக்குத் தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை என ஐந்து பொருள்கள் உண்டெனவும், ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கு எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருள்கள் உண்டெனவும் தொல்காப்பியர் இடையியலில் கூறியுள்ளார்.

“தேற்றம் வினாவே, பிரிநிலை, எண்ணே,
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே” (9)

“எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று
அப்பா லெட்டே உம்மைச் சொல்லே”(7)

என்பன நூற்பாக்கள்.

‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றோடு ‘இசைநிறை’ என்ற ஒன்று கூட்டி ‘ஏ’ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறியுள்ளார்.

“பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரம்மே” (3)