பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

19


நீடிய பிணியால் வருந்துவோர் என்
நேருறக் கண்டுளம் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்பது வள்ளலாரின் அருட்பா. புத்தரும், ஏழைகளையும் நோயாளிகளையும் அகவை முதிர்ந்து தளர்ந்தவர்களையும் கண்டு ஆழ்ந்த எண்ணத்தில் ஈடுபட்ட செய்தியை வரலாறு அறிவிக்கிறது.

பார்த்தார் சுப்பிரமணிய பாரதியார். உலகத்தில் ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனினும் இந்த உலகத்தையே அழித்து விடவேண்டும் எனக் கனல் கக்கினார்:

“தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்”

என்று கொக்கரித்தார். மற்றும், பெரியோர்கள் பலர் இந்தக் கோட்பாட்டைப் பல கோணங்களில் நின்று அறிவித்துள்ளனர். கடவுளுக்கு உணவு படைக்கின் அது உயிர்களைச் சென்றடையாது; உயிர்கட்கு உணவிடின் அது கடவுளுக்கும் ஏற்புடைத்தாகும்-என்பது திருமூலர் கருத்து;

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க் காகாது
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” (1857)

என்பது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

“அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”

என்றார் வடலூர் வள்ளலார்.

“எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”