பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

சுந்தர சண்முகனார்



பண்ணை என்பது ஒரு விளையாட்டு எனச் சொல்லதிகாரம் - உரியியலில் கூறிய தொல்காப்பியர் அடுத்த பொருளதிகார - மெய்ப்பாட்டியலில், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்” என மெய்ப்பாடுகள் பண்ணையில் தோன்றுவதாகக் கூறியிருப்பது குழப்பமும் வியப்புமாயுள்ளது. இதனினும் ‘விளையாட்டு ஆயம்’ (விளையாடும் கூட்டம்) என இளம்பூரணர் கூறியிருப்பது ஓரளவு நன்று. இதனினும், ‘நாடக மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு’ எனப் பேராசிரியர் கூறியிருப்பது மிகவும் நன்று.

இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியதாவது: பலர் கூடி ஆடலும் பாடலும் செய்யும் நிகழ்ச்சியும் தொல்காப்பியர் காலத்தில் ‘விளையாட்டு’ எனப் பெயர் வழங்கப்பட்டது என்பதாகும். மேலும் அறியவேண்டியது: பலர் கூடி ஆடல் பாடலுடன் நடத்தும் நாடகத்தில் இந்த எட்டு மெய்ப்பாட்டுப் பண்புகளையும் காணலாம் என்பதாகும்.

ஆடல் = கூத்தாகிய நாடகத் தமிழ். பாடல் இசைத்தமிழ். கூத்தைக் காணும்போதும் இசையைக் கேட்கும் போதும் எட்டு மெய்ப்பாடுகளின் சுவடுகளை அறியலாம்.

ஒரு நாள் ஒரு திரையோவியம் (சினிமா) பார்த்துக் கொண்டிருந்தபோது, கதைத் தலைவனும் (Hero) வில்லனும் போரிடும் காட்சி நடந்துாெண்டிருந்தது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித் தாவியும் ஊசலாடிக் கொண்டும் இருந்தன. ஒரு நேரம், வில்லன் கதைத் தலைவனைக் கொன்று விடுவான் போன்ற கட்டம் வந்தது. அப்போது பெண்கள் பகுதியிலிருந்து, வில்லனைக் குறிப்பிட்டு ‘அவனை விளக்குமாற்றால் அடியுங்கடி - அவனைப் பழந்துடைப்பக் கட்டையால் அடியுங்கடி’ என்ற குரல்கள் எழுந்தன. பெண்டிர் சிலர் இவ்வாறு குரல் எழுப்பினர்.