பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

27


செய்தலே யாகும் - என்பதுதான் வள்ளுவரின் கண்டு பிடிப்பு. இதை அறிவிக்கும் குறட்பா,

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்” (314)

வள்ளுவர் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இவ்வாறு கூறியுள்ளாரா? தீங்குக்குத் தீங்கே புரியும் மக்கள் மந்தையின் நடுவில் இருந்து கொண்டுதான் இவ்வாறு கூறியுள்ளாரா? வள்ளுவர் இவ்வாறு பரிந்துரைத்துப் பல நூற்றாண்டு காலம் ஆகியும், மக்கள் இந்த வழியைப் பின்பற்ற வில்லையே - ஏச்சுக்கு ஏச்சு - பேச்சுக்குப் பேச்சு - அடிக்கு அடி - உதைக்கு உதை - அழிவுக்கு அழிவு - என்பனவே இன்றும் நடைமுறையில் உள்ளனவே. ஆம் - இன்றும் மக்களின் நடைமுறை இவ்வாறு இருப்பதால் தான், இந்தக் குறள் பாடலுக்கு இன்னும் பெருமை இருந்து கொண்டுள்ளது போலும்!

வள்ளுவனார் ‘இன்னா செய்யாமை’ என்னும் ஒரு தலைப்பு இட்டுப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். பதிலுக்குத் துன்பம் செய்தால், நாம் தப்ப முடியாதபடி மேலும் துன்பமே பரிசாகக் கிடைக்கும். முற்பகலில் ஒருவர்க்குத் தீமை செய்யின், பிற்பகலிலேயே அந்தத்தீமை கொடிய வடிவெடுத்துத் திரும்ப நம்மை வந்தடையும். பதிலுக்குத் துன்பம் செய்யா திருத்தலே, தூய உள்ளத்தினரின் கோட்பாடாகும் - என்றெல்லாம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.

“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்” (313)
  
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (319)