பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

87



2.4. பொதுக்கம் - ஒதுக்கம்

புதுவை என்பதே பொதுகே எனப்பட்டது என்னும் ஓர் அறிஞரின் கருத்தைப் பேராசிரியர் ஒருவர் ஒப்புக் கொள்ளவில்லை. கலித்தொகை 88-ஆம் பாடலிலுள்ள

“::::புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல”

என்னும் தொடரில் உள்ள ‘பொதுக்கம்’ என்பதற்கு, (கப்பல்கள் வந்து) தங்குமிடம், மறைவிடம் என்பதாகப் பொருள் கொண்டு, பொதுக்கம் என்பதிலிருந்தே ‘பொதுகே’ பிறந்திருக்க வேண்டும் என அந்தப் பேராசிரியர் கூறுகிறார். இது சொன்மைக்குப் (சொல் அளவில்) பொருந்துவதுபோல் தோன்றினும், பொருண்மைக்குப் பொருந்துவதாகத் தெரியவில்லை. தங்குமிடம் - மறைவிடம் என்றால் புதுச்சேரி மட்டுந்தானா? மற்ற துறைமுகங்கட்கும் இப்பெயர் பொருந்தாதா? அந்தப் பயணிகள் பல துறைமுகங்கட்குச் சென்றிருப்பார்களே. மேலும், உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

“புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்” என்னும் தொடரைப் ‘புள்ளிக் களவன் புனல்சேர்பு ஒதுக்கம்’ எனப் பிரித்துக் கொண்டு, ‘ஒதுக்கம் என்னும் தொழிற் பெயர் ஆகுபெயர்’ என்று உரை வகுத்துள்ளார். எனவே, இந்தப் பெயர்க் காரணம் பொருந்துவதாகத் தெரியவில்லை.

அங்ஙனமெனில், பொதுகே, பொதுகா என்னும் பெயர்களின் போக்குதான் என்ன? நான் சொல்வது பொருத்தம் என எண்ணினால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையேல் தள்ளலாம். நான் சொல்லப்போவது முடிந்த முடிபு அன்று. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தாற் போன்றதே எனது முயற்சி.