பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

51


அடடா கவி வந்துவிட்டதே சார், இதோடு யார் சார் மாரடிக்கிறது என்றெல்லாம் பட்டுவிடும். இதுதான் கவிக்கு ஏற்பட்ட சாபம். இவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். வேறு சிலர் தமிழில் ஏதாவது கஷ்டமாய் இருக்க வேண்டியது அல்லது அபத்தமாய் இருக்கவேண்டியது - உடனே அதை எடுத்து மார்போடனைத்து முத்தமிட்டு பாராட்டிச் சீராட்ட எல்லாம் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் ஒருநாளும் நம்மோடு சேரமுடியாது. அவர்களை உயர்ந்த பீடத்தில் வைத்து மரியாதை பண்ணிவிட வேண்டியதுதான். வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப் பிற்போக்குத் தெய்வத்தின் ஆதிக்கம் வருவதற்கு நாளாகும். அந்த நாள் எல்லாம் கழிந்தால்தான் கலை தலைகாட்டமுடியும். எதற்கும் பருவம் காலம் எல்லாம் உண்டுதானே.

நானும் பல வருஷங்களாக தமிழ்ப் பாடல்களே சங்கீதக் கச்சேரிகளில் பாடவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வருகிறேன். தமிழர்கள் அதற்கு இசையவில்லை. கடைசியாக செட்டிநாட்டு ராஜா அவர்கள் பதினாறாயிரம் ரூபாய், தமிழ்ப்பாட்டாகக் கச்சேரி செய்பவர்களுக்கு வெகுமதி கொடுப்பதற்கு ரூ.10000 ஒதுக்கி வைத்து, வருகிற 14.8.41 முதல் 17.8.41 வரை அண்ணாமலை யுனிவெர்சிட்டியில் தமிழிசை மாநாடும் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னையும் அழைத்திருக்கிறார். சங்கீதம் தெரியாத என் போன்றவன் சொல் எப்படி அங்குள்ளவர்களுக்கு ஏறப் போகிறதோ தெரியவில்லை. அண்ணாமலை நகருக்குப் போகிறேன்.

வி.பி.எஸ். அவர்களைச் சமீபத்தில் பார்த்ததுண்டா. வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்