இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 4. அடங்கா ஆவல்!
காட்டாறு பாயுமந்தச் சலச லப்பிலே,
கயல்புரளும் நானல்நிறை மணற்ப ரப்பிலே,
மீட்டுமந்தக் குயிலினத்தின் இசைச்சு ழலிலே
வேண்டுமின்பம் அடைந்திடுவேன் இப்பு வியிலே!
1
விரியுலகக் கடல்குளித்து முத்தம் எடுப்பேன்;
விதவிதமாய்ச் செப்பனிட்டுத் தந்துக ளிப்பேன்;
புரியூதி என்நாட்டார் விடுதலை வாழ்வைப்
பூரணமாய்ப் பெறச்சொல்லி முரசு கொட்டுவேன்!
2
முழுமதியாய் அறிவுலகில் தண்மை யளிப்பேன்;
முத்தொழிலும் மண்ணுலகிற் செய்து முடிப்பேன்;
அழியாத தமிழ்மொழியை என்றும் மறவா
அன்போடு கவிபுனைந்து நாட்டிற் களிப்பேன்!
3
கவிச்சிறகால் வானேறிச் சுற்றி வருவேன்;
கண்சிமிட்டும் மீனினத்தைப் பற்றித் தருவேன்!
புவியரசர் யாவரும் எனக்கு நிகரோ?
புவியிலிதை அறியாத மக்கள் உளரோ?
4
- 46