இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. அகந்தை அற்றுவிட்டால்...?
வானொளி மண்ணில் பாயுதடா! உடல்
வாட்டம் பறந்ததிந் நாட்டினிலே!
நானெனும் அகந்தை அற்றுவிட் டாலொரு
நாளும் பயமில்லை வாழ்வினிலே!
1
‘மானம் உயி’ரென்று வாழ்ந்திருந்த பண்டை
மறவர் குடிவழி வந்தவர்நாம்!
கானக் குயிலென விடுதலையாம் வாழ்வில்
களித்துத் திளைத்தினிது வாழ்ந்திருந்தோம்!
2
ஆதியில் நாமோர் மரத்தின் கிளையென
அன்புப் பெருக்கில் தழைத்திருந்தோம்!
சாதி அறிவின்மை பொறாமை எனும்பல
சார்ந்தபின் சக்கை மனிதரானோம்!
3
பலப்பல வழிசென்று ஓரூர் அடைவதைப்
பார்த்தபின் என்செய்தோம்? சற்றுசொல்வீர்!
‘இலை-உண்டு’ எனும்வாதம் செய்வ தால்புவி
எவ்வழி சென்றதைக் கண்டுவிட்டோம்!
4
எந்நாடும் நம்செயல் கண்டு வியந்திட
ஏற்றவை செய்ய விரைந்தெழுவோம்!
இந்நாடு எம்நாடு எம்பாட்டன் சொத்தெனும்
எண்ணத்தில் மார்பை உயர்த்திடுவோம்!
5
48