13. ஏனோ?
அல்லி சிரிக்கும்; நடுங்கும் மரநிழல்;
அழகு நிலவொளி பாயும்;
புல்நுனி ஒளிசெயும்; நன்மணி போலப்
புதுமணம் வீசும் கடம்பு;
நல்லிசை மீட்டும் சல்லிபாய் அருவி;
நாணல் வெண்தலை அசைக்கும்;
‘கொல்’ லெனச் சிரித்துப் பகலெலாம் களித்த
குளிர்மரை சுருங்கிடல் ஏனோ?
1
வானிடை முளைக்கும் முழுமதி கண்டே
வாவென் றழைக்கும் குழவி;
போனதை வந்ததைப் பேசி முதியவர்
புத்துணர் வடைகிறார் நெஞ்சில்:
ஊன்மிசை உயிரில் இன்பம்; அடடா!
உயர்ந்தது முழுநிலா வானில்!
மானினம் பழிக்கும் கன்னியர் கூட்டம்
வாடி வதங்கிடல் ஏனோ?
2
சூடகம் ஆர்க்கக் கைத்தலம் கொட்டிச்
சுழல்விழி நகைமுகப் பெண்கள்
பாடுவர் ஆடுவர் பாலொளி கண்டே;
பாட்டியர் பழங்கதை சொல்வார்;
காடையாம் அவனுக் கென்னுளம் கொடுத்தேன்;
களித்தோம்; கண்டனை நிலவே!
வாடுதென் உடலுயிர்! நான்கடைத் தேற
வழிசொலா திருப்பதும் ஏனோ?
3
57