பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ராணி மங்கம்மாள்

"துயர நிழல்கள் என்னைப் பயமுறுத்தி வீழ்த்திவிட முடியாது நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. ஆனால் அவை என்னை வருத்தமுடியும். வருந்துவேன்.”

"நீங்கள் உள்ளூர வருந்தலாம். கலங்கலாம். ஆனால் நீங்கள் வருந்திக் கலங்கி ஆற்றலற்றுப் போயிருக்கிறீர்கள் என்று உங்கள் எதிரிகள் அறியும்படி மட்டும் விட்டுவிடக்கூடாது.”

"ஒருநாளும் அப்படி நடக்காது."

"அப்படி ஒருபோதும் நடக்கவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த யோசனையைக் கூறுகிறேன் மகாராணீ"

"உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை! குழந்தை விஜயரங்கனும் நானும் மதுரைக்குப் புறப்பட அரண்மனை ஜோதிடர்களைக் கலந்து பேசி ஒரு நல்லநாள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள் ராணி மங்கம்மாள்.

"நீங்கள் இப்போது திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்குச் செல்வது உங்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் என்பதைத் தவிர வேறொரு வகையிலும் பயன்படும்."

"என்ன அது?"

"மகனை இழந்து, மருமகளை இழந்து துயரத்திலிருக்கும் உங்களைப் பலவீனமான நிலையிலிருப்பதாகக் கருதிக் கிழவன் சேதுபதி சில தொல்லைகள் கொடுக்கலாம்."

"எனக்கும் உள்ளூற அப்படி ஒரு சந்தேகம் உண்டு!"

"சந்தேகம் மட்டுமில்லை! அது ஒரு சரியான அநுமானமும் ஆகும். நீங்கள் தொடர்ந்து திரிசிரபுரத்திலேயே இருந்தால் மதுரையைக் கைப்பற்ற முயல்வார் சேதுபதி!"

"அது நடக்காது நடக்க விடமாட்டேன்."

"அதை நடக்கவிடாமல் தடுக்க நீங்கள் திரிசிரபுரத்தில் இருப்பதைவிட மதுரையிலிருப்பது பயன்படும்."