பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

119

"நான் ஆயத்தமாயிருக்கிறேன். மதுரைக்குப் புறப்பட உடனே நாள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்" என்று மீண்டும் முன்னைவிட உறுதியான குரலிலே கட்டளையிட்டாள் ராணி மங்கம்மாள். அவள் குரலில் இப்போது புதிய உறுதியும், புதிய கண்டிப்பும் ஒலித்தன.


15. சாதுரியமும் சாகஸமும்

கிழவன் சேதுபதி என்ற பெயரைக் கேட்டவுடனே தன் சொந்தத் துயரங்களைக்கூட மறந்து உறுதியும் கண்டிப்பும் திடமான முடிவும் உடையவளாக மாறியிருந்தாள் ராணிமங்கம்மாள்.

அரசியலில் ஏற்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து ஏற்பதும், எதிர்க்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து எதிர்ப்பதும்கூடி விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கி விடலாம் என்பதைக் கடந்த கால அநுபவங்களிலிருந்து அவள் நன்கு உணர்ந்திருந்தாள். புரிந்து கொண்டிருந்தாள். கணித்தும் வைத்திருந்தாள்.

'தான் ஒரு பெண்-அதனால் பலவீனமானவள்' என்று தன்னைப்பற்றி யார் எண்ணினாலும் அவர்களது எண்ணத்தைப் பொய் என்று உடனே நிரூபித்துக் காட்டும் துணிவோடு செயற்படுவது எப்போதுமே அவளுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

மகனையும், மருமகளையும் இழந்து தான் பலவீனமாக இருந்தாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல எதிரிகள் நடந்துகொள்ளத் தயங்கமாட்டார்கள் என்று தான் அவளுக்குத் தோன்றியது. ராஜதந்திரிகளும் அரசாங்க அதிகாரிகளும் கூறிய யோசனைகளை மட்டுமே நம்பிவிடாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சுயமாகவும் சிந்தித்தாள் அவள்.