பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

ராணி மங்கம்மாள்

ஒரு நல்லநாள் பார்த்து நல்லவேளை பார்த்துக் குழந்தை விஜயரங்க சொக்கநாதனுக்கு முடிசூட்டச் செய்தாள். தன் தலையில் சுமத்தப்படுவது எத்தகைய பாரம் என்பது அவனுக்கு ஒரு சிறிதும் புரியாத பாலப் பருவத்திலேயே அந்தப் பாரத்தைச் சுமந்தான் குழந்தை விஜயரங்க சொக்கநாதன்.

"குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல் என்பார்கள்! இந்த முடிசூட்டு விழாவும் அப்படித்தான் நடக்கிறது" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் இராயசம். மங்கம்மாள் அதை மறுத்தாள்.

"குருவி எந்த நாளும் பனங்காயைச் சுமக்க முடியாது இவன் அப்படியில்லை. வளர்ச்சியும் பொறுப்பைத் தாங்கும் பக்குவமும் இவனுக்கு வரும்."

"வரவேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். தாயையும் இழந்து தந்தையையும் இழந்து வளரும் இவனை உருவாக்குவதற்கு மகாராணியார் அரும்பாடுபடவேண்டியிருக்கும்! மகனறிவு தந்தையறிவு என்பார்கள். தந்தை கண்காணத் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தால்தான் அது முடியும். இவனோ இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்துவிட்டான். பிறந்த பின் உடனே தாயையும் இழந்துவிட்டான்."

"இவன் மட்டும் பிறந்திருக்காவிட்டால் இங்கு நான் இன்னும் உயிர் வாழ்வதற்கு அவசியமே இருந்திராது."

"இவன் பிறந்திருந்தும்கூடச் சமயா சமயங்களில் இப்படி விரக்தியடைந்தது போல் பேசுகிறீர்கள். இப்படி ஒரு பேரன் பிறவாமலே இருந்திருந்தால் மகாராணியாரின் விரக்தி எவ்வளவாயிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

"திரிசிரபுரத்தை விட்டு நீங்கி மதுரைக்கு மாறி வந்ததில் என் துயரங்கள் அதிக அளவு குறைந்துள்ளன. ஆனாலும் பழைய துயரங்களும் இழப்புகளும் நினைவுவரும்போது எங்கிருந்தாலும் மனத்தை ஆற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்."