பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

ராணி மங்கம்மாள்

ஊர்களைக் கொள்ளையடித்துத் தொல்லை கொடுப்பதைத் தொடர்ந்தனர்.

ராணி மங்கம்மாளிடம் காவிரிக்கரை ஊர்களின் மக்கள் முறையிட்டனர். தேர்ந்த தளபதி நரசப்பய்யாவினாலேயே இந்தத் தஞ்சைக் கொள்ளைக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாது போகவே ராணி கவலையில் மூழ்கினாள். நரசப்பய்யாவைக் கூப்பிட்டு மறுபடி ஆலோசனை செய்தாள். அவர் கூறினார்:

"நம் ஊர்களைக் கொள்ளையிடும் ஆசையில் தங்கள் தலைநகரான தஞ்சையைக்கூடப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிட்டு இங்கே வந்து தொல்லை கொடுக்கிறார்கள் ஷாஜியின் ஆட்கள். அவர்களைத் தந்திரத்தால்தான் முறியடிக்க வேண்டும். நம் படைவீரர்களில் சிலரை அவர்கள் தலைநகராகிய தஞ்சைக்கு அனுப்பி அங்கே பதிலுக்குக் கொள்ளையிடச் செய்தால்தான் வழிக்கு வருவார்கள்."

"கொள்ளிடத்தைக் கடந்து படை தஞ்சைக்குப் போக முடியுமா தளபதி?"

"சில நாட்களில் கொள்ளிடத்தில் நீர் ஆழம்க குறைகிற ஒருநேரம் பார்த்து நாம் கரையைக் கடந்து தஞ்சைக்குள் நுழைந்துவிடலாம்."

"எப்படியோ இது ஒரு மானப்பிரச்னை நம்மை விடச் சிறிய மன்னன் ஒருவன் நமக்குத் தலைவலியாயிருக்கிறான்; இதை நாம் இப்படியே அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது."

"கவலைப்படாதீர்கள் மகாராணி! அவர்கள் நம் காவிரிக்கரை ஊர்களில் கொள்ளையிட்டதற்குப் பதில் வட்டியும் முதலுமாகத் திருப்பிப் பெற்றுத்தருகிறேன்.இது என் சபதம்" என்றான் வீரத்தளபதி நரசப்பய்யா.

"ரவிவர்மனுக்குப் புத்தி புகட்டியதுபோல், ஷாஜிக்குப் புத்தி புகட்டியாக வேண்டிய காலம் வந்து விட்டது! வெற்றியோடு திரும்பி வருக!" என்று நரசப்பய்யாவை வாழ்த்தி வீரவிடை கொடுத்தாள் ராணி மங்கம்மாள்.