பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 38 இராமன் - பன்முக நோக்கில் நலன் தீங்கு பற்றியோ எந்தச் சராசரி மனிதனும் நினைந்து பார்க்கமாட்டான். உயர்ந்த பண்புடையவர்கள் சாதாரண நேரங்களில் பிறர்துயர்பற்றிச் சிந்திப்பார்களே தவிர, மகிழ்ச்சி பொங்கும் இந்தச் சூழலில் அந்த மகிழ்ச்சிக்குக் காரணமான இடமும், மனைவியும் உடன் இருக்க இதனைச் சிந்திப்பது கடினம். வழிநடந்த களைப்பு நீங்க இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பூவின் மெல்லிய பாதம் கானம் போந்ததும், குற்றமற்ற தம்பியின் கை சாலை சமைத்ததும், நெஞ்சை நெருட இளையவனைப் பார்த்து, தனக்காக அவன் ஏற்றுக்கொண்ட இந்த இடர்மிகு வாழ்க்கையை நினைக்கின்றான். தன்னுடைய துயரைப் போக்கப் பிராட்டி இருக்கிறாள். இளையவனுக்கு யார் இருக்கிறார்கள் எஞ்சியுள்ள பதினான்கு ஆண்டுகளும் இந்தத் தொண்டைச் செய்துகொண்டே, இவர்களுக்குக் காவலாகவும் இருக்க வேண்டியவன் அவன். தான்தான் தந்தையின் ஏவலைத் தலைமேல் தாங்கிக் கானம் புகுந்தான். கற்புடை மனைவி கணவன் இருக்குமிடமே சுவர்க்கம் என்று நினைப்பவள் ஆதலின் துன்பத்தை ஏற்றுக்கொண்டு வந்தாள். இளையவன் வரவேண்டிய அவசியம் என்ன? தம்பி எனும்படி செல்லாதே. அடியாரின் ஏவல் செய்தி என்று ஈடுஇணை அற்ற அந்தத் தாய் இட்ட கட்டளையை நிறைவேற்ற வந்தானா? இல்லை. தாயைச் சந்தித்து அவள் கட்டளை இடுவதற்கு முன்பே மன்றாடி, "நீ இருக்கும் இடத்தில்தான் சீதையும் நானும் இருப்போம்" என்று கூறித் தன் சம்ழ்தத்தைப் பெற்றுவிட்ட் தம்பியை மறுபடியும் கண்ணிர் நிறைந்த கண்களால் பார்க்கிறான் இராகவன். "என் கடமையை நிறைவேற்றிப் புகழ்பெறுவது இப்பொழுது ஒருபொருட்டாகத் தெரியவில்லை. உனக்கு நான் இழைத்ததுன்பத்தை நினைந்து பார்க்கையில்தான் என்னையே நான் கடிந்துகொள்கிறேன்" என்ற பொருள்பட இராமன் என்ற மாமனிதன் பேசியதைத் தான் "அடரும் செல்வம்” என்று துவங்கும் பாடல் குறிக்கின்றது.