பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் இராமன் கதை வேதத்தில் உளதா? சக்கரவர்த்தித் திருக்குமாரனுக்கு இராமன் என்ற பெயரும் வைக்கப்பட்டதை வான்மீகி, கம்பன் என்ற இருவருமே தத்தம் காப்பியத்தில் கூறுகின்றனர். என்றாலும் இந்த இரு காப்பியங்களுக்கு நெடுங்கால முன்பே இராம. என்ற பெயரும், தசரத என்ற பெயரும், இட்சுவாகு' என்ற பெயரும், ரகு' என்ற பெயரும், இராகவ என்ற பெயரும் ரிக்வேதத்தில் காணப்படுகின்றன என்பது உண்மைதான். இவற்றுள் ரகு என்பதும், இராகவ என்பதும் எந்நிலையிலும் இராமனைக் குறிக்கவில்லை என்று வேதவிற்பன்னர்கள் கூறுகின்றார்கள். ல' என்ற எழுத்தும், உச்சரிப்பும் அக்காலத்தில் வேதம் ஒதும் பலருடைய நாவில் நன்கு வெளிப்படாமையினால் "லகு"(எளிது) என்ற சொல் லகரத்திற்குப் பதிலாக ரகரம் பெற்று ரகு என்றும், லாகவம் (சுலபமாக) என்ற சொல் லகரத்திற்குப் பதில் ரகரம் பெற்று ராகவம் என்றும் வழங்கப்பட்டன. ரிக்வேதத்தில் (10வது மண்டலம், 93வது பாடல், 14வது வரி) ராம என்ற சொல்லும், தசரத (1-1264) என்ற சொல்லும், சீதா (4-57-57) என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் உண்மை தான். ஆனால் இங்குப் பேசப்படும் தசரத என்ற சொல் பத்துத் தேர்கள் என்ற பொருளிலும், சீதா என்ற சொல் நிலத்தை உழுகின்ற ஏரின் கொழுமுனை என்ற பொருளிலும் ராம என்ற சொல் சாதாரண மனிதனின் பெயர் என்ற பொருளிலும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்துக்கொண்டு இராமனுடைய கதை ரிக்வேதத்தில் இடம் பெற்றுள்ளது என்று கூறுவது தவறாகும்.