பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 38 இராமன் - பன்முக நோக்கில் பெருங்கல்வி, கலைஞானம் என்பவற்றோடு கூடிய ஒருவன் மாபெரும் பக்தனாகவும் ஆகமுடியும் என்று நினைக்கிறான் கம்பன். அறிவு, உணர்வு என்ற இரண்டையும் ஒருவனிடம் படைத்து அவன் இறைத்தொண்டு புரிவதில் ஈடு இணையற்று விளங்க முடியும் என்பதைக் காட்டவே கம்பன் தான் படைத்த அனுமன் என்ற பாத்திரத்தைப் பயன்படுத்துகிறான். அவன் கண்டு கணித்த காட்சி இரலைக் குன்றத்தில் சவரியின் அறிவுரைப்படி சோதரர் இருவரும் சுக்கிரீவனைத் தேடி வருகின்றனர். புதியவர் இருவர் வருகின்றனர் என்று அறிந்த சுக்கிரீவன் மலை முழைஞ்சில் அஞ்சிப் பதுங்கிக்கொள்கிறான். மாபெரும் அறிவாளியாகிய அனுமன் இப்படி ஒரு முடிவுக்கு வருவதை விரும்பாமல், உயரமான பாறை ஒன்றின்மேல் ஏறி, புதிதாக வருபவர்களை மறைவாக நின்று கூர்மையாகக் கவனிக்கிறான். ஒருவனுடைய அறிவு என்பது அவனுடைய கண், காது என்பவை சேகரிக்கும் செய்கைகளை ஒன்றாக இணைத்து ஒரு கோவைப்படுத்தி, அதற்கொரு வடிவு கொடுத்து இது இன்னது என்ற முடிவுக்கு வர உதவுவதாகும். இதனைத்தான் வள்ளுவப் பேராசான், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அதன் உள்ளே புகுந்து அதன் உண்மைத் தன்மையைக் காண்பதே அறிவு என்று கூறுகிறான். இந்த அறிவின் வடிவாகிய அனுமன், உயரத்தில் இருந்துகொண்டு தன் கண், செவி என்ற இரண்டு பொறிகளையும் பயன்படுத்தி அவை சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, காட்சிப் பிரமாணம், அனுமானப் பிரமாணம் என்பவற்றைப் பயன்படுத்தி, வருகிறவர்கள் யார் என்பதை எளிதில் கண்டு விடுகிறான். அவன் கண்ட காட்சி அஞ்சனை சிறுவன் தன் கூர்மையான பார்வையால் முதலில் கண்ட காட்சி என்ன? "வெஞ்சமத்தொழிலர், தவ