பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 ேே. இராமன் - பன்முக நோக்கில் அதாவது, இராகவன் அனுமன் விடையைக் கேட்டுவிட்டு, இவனைவிடச் சிறந்தவர்கள் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து, ஆற்றல், நிறைவு, கல்வி அமைதி, அறிவு என்பவை அனைத்தும் ஒன்றுக்கொன்று குறையாமல் இவன்மாட்டுச் சமமாக வளர்ந்துள்ளன என்ற முடிவுடன்தான் இராமன் பேசினான் என்று பாடுகிறான் கம்பன். அனுமன் துரத்தே நின்று இராமனைக் கண்டது முதல் இதுவரை உள்ள பதினேழு பாடல்களையும் மீட்டும் ஒருமுறை படித்தால் குழப்பம்தான் மிஞ்சும். இராமனிடத்தில் அனுமன் கூறிய விடையாக உள்ள இரண்டு பாடல்களிலும் எந்தப் புதுமையும் இல்லை. அதனால் இராமன் பக்கத்தே நிற்கும் இலக்குவன், இந்தச் சாதாரண விடையைக் கூறிய அந்தண பிரமச்சாரியைக் கவனிக்கவும் இல்லை. அவன் முகத்தைப் பார்க்கவும் இல்லை. அவனைச் சட்டை செய்யவுமில்லை. அப்படியிருக்க, இராமன் மட்டும் உப்பு சப்பில்லாத இந்த இரண்டு பாடல்களைக் கேட்டுவிட்டு அறிவு, கல்வி முதலிய எதிலும் இவனுக்கு நிகர் யாருமில்லை என்ற முடிவிற்கு வந்துதான் அவனைப் புகழ்ந்து பேசுகிறான் என்று கம்பன் சொல்வது இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது. எதை வைத்துக்கொண்டு இராமன் இந்த முடிவுக்கு வந்தான்? ஆழ்ந்து சிந்தித்தால், இந்தப் பாடல்களில் அதற்கு விடை கிடைக்காது. ஆஜானுபாகுவான இராமனுடைய எந்த உறுப்பிலும் ஈடுபடாமல் அவன் கண்ணை நேரிடையாகப் பார்க்கும் வல்லமை பெற்றிருந்தான் அனுமன். ‘கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண’ என்று கூறும்பொழுதே அதனைக் கூறினவனாகிய அனுமன் கண்களை இராமன் முழுவதுமாகப் பார்த்தான். எனவே, ஒருவரை ஒருவர் கண்களில் மூலமே எடைபோட்டுக் கொண்டனர். பேசப்பட்ட வார்த்தைகள் உபசார வழக்காக நின்றனவே தவிர உண்மை நிலையை உணர்த்தவில்லை.