பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மக்களும் இராமனும் இராமன் - திருமாலின் எளிவந்த தன்மை ஒரு பேரரசன் நீண்ட காலம் மக்கட்பேறு இல்லாமல் இருந்து மாபெரும் வேள்வி ஒன்று இயற்றி, அதன் பயனாகச் சிறுவர் நால்வரைப் பெறுகின்றான். அந்நால்வரில் மூத்தவன் இராமன். பெரிய மன்னனின் மக்களாக இருந்தும், இவர்கள் குலகுருவாகிய வசிட்டனின் ஆசிரமத்தில் கல்வி பயில்கின்றனர். ஆசிரமம் ஊருக்கு வெளியே இருத்தலின், அங்குச் சென்று கல்வி பயிலுகின்றனர் என்று பேசுகிறான், கவிஞன். மாமன்னனின் மக்கள், குருவிடம் செல்வதும், நடந்தேதான் என்பதைக் கவிஞன் சொல்லாமல் சொல்கிற்ான். ஒருநாள் ஆட்சிக்கு வரப்போகின்ற இராமன், மக்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைக் கூறவந்த கவிஞன், பின்வரும் பாடலில் அச்சிறப்பை எடுத்துக் காட்டுகிறான். எதிர்வரும் அவர்களை, எமையுடை இறைவன், முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா எதுவினை? இடர் இலை ? இனிதுதும் மனையும்? மதிதரு குமரரும் வலியர்கொல்? எனவே - கம்ப.31 எதிரே வருகின்றவர்களை நிறுத்தி அவர்களுடைய நலனை விசாரித்து, அவர்கள் குடும்பநலனையும் விசாரித்து, வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை உளதா என்றும் இராமன் கேட்கிறான் என்ற கருத்துடைய இப்பாடலில் எத்தனைக் கருத்துகள் உள்ளடங்கி உள்ளன. எதிர்வரும் அவர்களை என்று கூறியதால் வருகிறவர்கள் சாதாரணமான குடிமக்கள், நடந்தே வருகிறார்கள் என்பது புலனாகின்றது. அப்படிப்பட்ட குடிமக்களை நிறுத்தி அரசகுமாரன் பேசுகிறான் என்றால்,