பக்கம்:இருட்டு ராஜா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்19

 என்கிற தைரியம்தான். அவர் பெயரே பாபநாசம் பிள்ளை என்றிருந்ததனால் புதிய புதிய பாபங்கள் செய்வதற்கு அவர் தயங்கவில்லை. பூவுலிங்கம் உயிரோடிருந்த காலத்தில் ‘சீட்டுக்கட்ட’ என்றும்,வேறு சிறுசிறு காரணங்கள் சொல்லியும் அவர் திருப்பிக் கொடுப்பதாக வாங்கியிருந்த ரொக்கப் பணத்தை ‘ஏப்பம் போட்டு விட்டார்.’ அப்படி எதுவும் பணம் தரவேண்டியதிலை என்றும்,சீட்டு பாக்கிவகையில் வடிவுதான் முந்நூறு ரூபாய் வரை தர வேண்டும் என்றும் சொன்னார். ஒவ்வொரு பூவின் போதும், நெல் சரியாக விளையவில்லை என்று பொய்க் கணக்குக் கூறி அவர் லாபம் கண்டுவந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவர் வடிவைப் பார்த்துப் பல்லிளித்து, சாடைமாடையாக ஏதோ சொன்னதை, முத்துமாலை கேட்டு விட்டான். அவன் வீட்டில் இல்லை என்ற நினைப்பில்தான் அவர் அவ்வாறு சாடை பேசத் துணிந்தார். ஆத்திரம் கொண்ட முத்துமாலை அரிவாளும், கையுமாக வெளியே வந்தான். “வேய், நீரு பெரியப்பாவா இருந்தாலும் சரி, அதுக்கு மேலே பெரியவரா இருந்தாலும் சரி, உம்மை இங்கேயே வெட்டிப் பொலியிட்டிருவேன். சரியான உத்திராட்சப் பூனை நீ. ஒண்ணாம் நம்பர் ஆஷாட பூதி, பணத்துக்கு நாமம் போட்டீரு, பூ தோறும் நெல்லை முழுங்கினிரு. கள்ளக் கணக்கெழுதி, ரூபா வேறே கேட்டிரு இப்ப இது மாதிரிப் பண்ண ஆரம்பிச்சிருக்கீரு. உம்மை நாசம் பண்ணினா, அது பாபமே ஆகாது”. என்று கத்திக் கொண்டு அவர் முன்னே வந்து நின்றான்.

பெரியவர் வெலவெலத்துப் போனார். நா குழற, “என்னடே, இல்லேடே, என்ன இது...தெரியாத்தனமா” என்று உளறினார். ‘நீ பணம் எதும் தரவேண்டியதில்லே. இனி வயலை எல்லாம் நீயே பார்த்துக்கோ’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/21&oldid=1138954" இலிருந்து மீள்விக்கப்பட்டது