ராத்திரி, பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும்.
“கூகூ” என்று ஒரே கூச்சல்.
தங்கராசு விழித்துக் கொண்டான். அம்மா விழித்த படிதான் இருந்தாள்.
“என்னமோ ஒரே கூச்சலா இருக்கு.ஏதோ கலாட்டா போலிருக்கு!” என்றான்.
“தெக்குத்தெரு மூலையிலேதான் கேட்குது. என்னமும் சண்டையாயிருக்கும்.”
தங்கராசு விளக்கை எரிய விட்டான். திண்ணைக்குப் போக அடி எடுத்தான்.
“ஏ ராசு, நீ ஏன் வெளியே போகப் போறே? பேசாம உள்ளேயிரு. அந்தக் குடிகாரமட்டை முத்துமாலை தான் ஏதோ வம்பிலே இறங்கியிருக்கான். அவன் சீட்டி அடிக்கிற சத்தம் தான் அதிகமாக் கேட்டுது. இப்ப கூடக் கேட்குது. கவனிச்சியா?” என்று அம்மா பொரிந்து கொண்டிருத்தாள்.
பலரது இரைச்சலுக்கும் மேலாக ஓங்கி ஒலித்தது. முத்து மாலையின் “ஹ்விட்டோ ஹ்வீட்” சீட்டி.
“வேறே என்னமோ நடத்திருக்கணும் அம்மா. அது தான் பெரிய இரைச்சலா இருக்கு” என்று தங்கராசு சொன்னான்.
“என்னமும் இருந்துட்டுப் போகுது. விடிஞ்சா தானாத் தெரியும்” என்று அம்மா அவனைத் தடுத்தாள்.