வல்லிக்கண்ணன்89
உடனடியாக வேறு இடத்தில் பந்தல் போட வேண்டிய அவசியமும் இல்லை அவனுக்கு. அதனால், சாவகாசமாகப் பிரிக்கலாமே என்று எண்ணியிருந்தான்.
கோயில் மீண்டும், பக்தர்களின் வருகை இல்லாமல் வெறிச்சிட்டுத் தோன்றலாயிற்று. ராத்திரி வேளையில் தான் முத்துமாலையும் அவனுடைய நண்பர்களும் அங்கே கூடுவார்கள். பகலில் ஆள் நடமாட்டம் இராது.
பதினோரு மணி சுமாருக்கு பூசாரி வருவான். கதவைத் திறப்பான். “நெவித்தியம்” (நைவேத்தியம்) என்று ஏதோ ஆக்குவான். அப்போது மடப்பள்ளிவில் புகை வரும். கிணற்றில் தண்ணீர் எடுத்து, அம்மன் சிலை, இதர சில்லறைத் தேவதைகளின் சிலைகள், பலிபீடம் எல்லாவற்றையும் குளிப்பாட்டுவான். பூமாலைகள் சாத்துவான்.
காக்கைகள் வந்து அருகில் உள்ள வேப்பமரக் கிளைகளில் பொறுமையாக உட்கார்ந்திருக்கும்.
பூசாரி பலி பீடத்தில் சிறிது சோற்றை வைத்து நீர் தெளித்து “நெவித்தியம் பண்ணி” விட்டு, அந்தச் சோற்றைச் சிதறிப் போடுவான். அதைத் தின்பதற்குக் காக்கைகள். பாயும். இந்தப் பரபரப்பு தவிர வேறு எந்த விதமான பரபரப்பும் இராது அங்கே, சாதாரண நாட்களில்.
செவ்வாய்க்கிழமை என்றால், ஒரு சில பெண்கள் தலை காட்டுவார்கள். கோயில் திறந்திருந்தால் உள்ளே போய்க் கும்பிடுவார்கள். இல்லாவிடில், பிரகாரத்தைச் சுற்றி வந்து, அடைத்த கதவின் முன் நின்று அம்மனை நினைத்துக் கும்பிட்டு விட்டுப் போவார்கள்.
இதெல்லாமே பன்னிரண்டு மணிக்குள் முடிந்து போகும். நடுப்பகலுக்கு மேலே அந்தக் கோயிலின் பக்கம் யாருமே தலை காட்ட மாட்டார்கள்.