பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

9

பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்ந்திடுவது போரின்போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகிவிடுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் அந்தப் பகை உணர்ச்சியைக் கொண்டு விடுகின்றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில்தான் விழுகிறது; தீயோ எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது அல்லவா.

இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம் கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச் சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய், 'தாக்கு! அழி! வெட்டு! குத்து!' - என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே; அப்படியானால் அந்தப் பண்புகள் - மனிதத் தன்மை - அடியோடு மடிந்து போகின்றனவா? மடிந்து விடுகின்றன என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதிய நிலை ஏற்பட்டதும், மீண்டும் மெள்ள மெள்ள அந்தப் பண்புகள் மலருகின்றன; சமுதாயத்துக்கு மணம் அளிக்கின்றன.

மடிவதில்லை; ஆனால் அந்தப் பண்புகள் மங்கி விடுகின்றன; மறைந்து விடுகின்றன.

பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி, அந்தப் பண்புகளை மூலைக்குத் துரத்திவிடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து விடுவது போன்ற நிலை!

கப்பிக் கொண்டிருக்கும் காரிருளுக்குப் பின்னே, விண்மீன் உளது என்பதனையும், அதன் ஒளி காரிருளைக் கூடக் கிழித்தெறிந்து கொண்டு வெளிக் கிளம்பக் கூடும் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறார் ஹால்கெயின் என்னும் பேரறிவாளர் 'இரும்பு முள்வேலி' எனும் தமது நூலில்.

இங்கிலாந்துடன் ஜெர்மனி போரிடும் நாட்கள்; உலகையே தன் காலடி விழச் செய்திடத் துணிந்து கெய்சர், போர் நடாத்திய நாட்கள்; முதலாவது உலகப் போர்.