பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

11

மான் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு பகுதி. அங்கு ஒரு விவசாயக் குடும்பம். மிராசுதாரனிடம் ஒரு பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபட்டு வாழ்க்கையை நடத்திச் செல்லும் ஒரு குடும்பமும், முதியவர் - அவர் மகன் - அவர் மகள் - கொண்ட குடும்பமும்.

ஜெர்மனியை அழித்தொழித்தாலொழிய, இங்கிலாந்து மட்டுமல்ல, மனித குலமே அழிந்து போகும் என்ற உணர்ச்சி எங்கும் பரவி இருந்ததுபோலவே, அந்த சின்னஞ்சிறு தீவிலும் பரவி இருந்தது.

முதியவரின் மகன், பிரிட்டிஷ் படையில் சேர்ந்தான்; முதியவர் மகிழ்ந்தார்.

'என் அண்ணன் போர்வீரன்! பொல்லாத ஜெர்மானியரை அழிக்கும் புனிதப் போரில் ஈடுபட்டிருக்கிறான்' என்ற எண்ணம் கொண்ட அந்த எழில் மங்கை, தன் குடும்பத்துக்கு அண்ணன் பெருமை தேடிக் கொடுக்கிறான் என்ற பெருமித உணர்ச்சியில் திளைத்திருக்கிறாள்.

எங்கும் பரவி, எல்லோர் உள்ளத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது போலவே மோனா மனதிலும் ஜெர்மானியர் வெறுப்புணர்ச்சி ததும்பிக் கிடந்தது. 'ஒரு துளியும் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. கொன்று குவிக்க வேண்டும் அந்தக் கொடியவர்களை; பூண்டோடு ஒழிக்க வேண்டும்' என்று கருதினாள்.

ஜெர்மானியர்களின் காட்டுமிராண்டித்தனம், கொலை பாதகத் தன்மை பற்றிய தகவல் நிரம்பக் கிளம்பியபடி இருந்தன. ஒன்றுக்குப் பத்தாக இவை வளர்ந்தன! வெறுப்புணர்ச்சி மூண்டுவிட்டிருந்தது. முதியவர் கூட அவ்வளவு கொதித்துப் பேசுவதில்லை. அவருடைய மனதிலே சிறிதளவு பழைய பண்புகள் உலவிட இடம் இருந்தது. அந்த மங்கைக்கோ உள்ளம் முழுவதும் அந்த ஒரே ஒரு உணர்ச்சிதான்; ஜெர்மானியர் மீது வெறுப்பு; அளவு கடந்த அகற்றப்பட முடியாத வெறுப்பு. அதிலும் போர்க்களம் சென்றுள்ள தன் அண்ணனைப் பற்றிய எண்ணம், அந்த வெறுப்புணர்ச்சியை வெந்தழல் ஆக்கிவிட்டிருந்தது.